சென்னை: திமுக மாணவர் அணி செயலாளர் இரா.ராஜீவ் காந்தி நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய பாஜ அரசு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் 3, 5 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்றால்தான் மேல்படிப்புக்கு செல்ல முடியும் என அறிவித்ததோடு அதற்கு சம்மதிப்பதாக பெற்றோர்களிடம் கட்டாய கையெழுத்து வாங்கும் அடாவடியிலும் இறங்கியிருக்கிறது. 3, 5, 8ம் வகுப்புகளில் தோல்வியைச் சந்திக்கும் மாணவர்களின் கல்விக் கனவே சிதைந்து, அவர்கள் அப்பா, தாத்தா பார்த்த குலத் தொழில் நோக்கி தள்ளப்படும் படுபாதகம் இந்த அறிவிப்பின் மூலம் நிச்சயம் அரங்கேறும்.
அதுதான் ஒன்றிய அரசின் நோக்கமாகவும் இருக்கிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியில் நம் குழந்தைகளின் கல்வி உரிமையைப் பாதுகாக்க உறுதியேற்போம். 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களின் உயர்கல்விக் கல்விக் கனவு பொதுத்தேர்வில் வெற்றி பெற்றால்தான் சாத்தியப்படும் எனும் மோடி அரசின் கயமைத்தனத்தை வன்மையாகக் கண்டிப்பதோடு புதிய கல்விக் கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் எச்சரிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.