சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்பதால் வட தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு மாறிய நிலையில், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு காற்றழுத்தம் உருவானது. அது மேற்கு- வட மேற்கு திசையில் நகரத் தொடங்கியதால், நேற்று முன்தினம் கடலோர மாவட்டங்களை உள்ளடக்கிய 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.
குறிப்பாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை கொட்டித் தீர்த்தது. அதில் அதிகபட்சமாக வேளாங்கண்ணியில் 170 மிமீ மழை பெய்துள்ளது. மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.
அதில் அதிகபட்சமாக வேளாங்கண்ணியை அடுத்து நாகப்பட்டினம் 150மிமீ, காரைக்கால் 140மிமீ, நன்னிலம், கடலூர், பரங்கிப்பேட்டை, புதுச்சேரி 120மிமீ, வேதாரண்யம், திருப்பூண்டி 110மிமீ, கோடியக்கரை, சிதம்பரம், தலைஞாயிறு, மயிலாடுதுறை, கேஎம்கோயில், மதுராந்தகம், 100மிமீ, சீர்காழி, தரங்கம்பாடி, வானமாதேவி, திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் 90மிமீ, கேளம்பாக்கம் 80மிமீ, வானூர், முண்டியம்பாக்கம், மரக்காணம் 70மிமீ, திண்டிவனம், சென்னை, சத்யபாமா பல்கலைக் கழகம் 50மிமீ, மழை பெய்துள்ளது.
சென்னையில் ஆலந்தூர், சென்னை விமான நிலையம், சோழிங்கநல்லூர், தாம்பரம், அம்பத்தூர், பெருங்குடி, கோடம்பாக்கம், எம்ஜிஆர் நகர், எண்ணூர், தரமணி, அடையாறு, அண்ணா பல்கலைக் கழகம், ஆகிய இடங்களில் 50மிமீ முதல் 30மிமீ வரை மழை பெய்துள்ளது. இந்நிலையில், தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த குழைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று இரவில் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது இன்று வட மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பின்னர் அது 17ம் தேதி கொல்கத்தாவில் கரையைக்கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் 17ம் தேதி வரை கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடாப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்றும், மத்திய மேற்கு- வட மேற்கு வங்கக் கடல் பகுதிகள், வட ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதிகள் ஆகிய இடங்களிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால், மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதை அடிப்படையாக சென்னை வானிலை ஆய்வு மையம் தயாரித்துள்ள அறிக்கையின் பேரில், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வேண்டிய வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசும் அறிவுறுத்தியுள்ளது. மழை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
* பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
* மீட்பு படைகளை தயார் நிலையில் வைக்க உத்தரவு
தமிழகத்தில் 17ம் தேதி வரை தொடர்ந்து கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட கனமழை பெய்யக்கூடிய 27 மாவட்டங்களுக்கும் மாவட்ட நிர்வாகங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். அதேபோல், எந்த தேவைகளையும் சமாளிக்கக்கூடிய அளவிற்கு நடவடிக்கையினை மாவட்ட ஆட்சியர்கள் துரிதப்படுத்த வேண்டும் என வருவாய் துறை ஆணையர் எஸ்.கே.பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.