டெல்லி: டெல்லியில் ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடிசை பகுதிகள் துணியால் மூடப்பட்டிருப்பது விமர்சனங்களை கிளம்பியிருக்கும் நிலையில் சில இடங்களில் குடிசைகளை புல்டோசர்களை கொண்டு இடித்து தள்ளுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் 9ம் தேதி மற்றும் 10ம் தேதி ஆகிய 2 நாட்களும் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர், இங்கிலாந்து பிரதமர், கண்டா பிரதமர், ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் டெல்லியை அழகாக காட்டுவதற்கு குடிசைகளை துணியை கொண்டு மறைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள் சில முக்கிய பகுதிகளில் உள்ள குடிசைகளை புல்டோசரை கொண்டு இடிக்கும் பணியை டெல்லி மாநகராட்சியை சேர்ந்த அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். டெல்லியை அழகுப்படுத்தி காட்டும் நோக்கத்துக்காக இந்த குடிசைகளை அகற்றவில்லை என்றும், அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருப்பதால் அகற்றுவதாகவும், அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இது வழக்கமான நடவடிக்கைகளில் ஒரு பகுதி தான் என்றும் கூறியிருக்கும் டெல்லி அமைச்சர் kaushal kishore; 4 மாதஙக்ளில் 41 முறை சட்டவிரோத குடிசைகள் இடிக்கப்பட்டு இருப்பதாக விளக்கம் அளித்துள்ளார். குடிசைகள் இடிக்கப்பட்டு வருவது தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.