சென்னை: ‘யாருக்கும் அஞ்சாத ஊடகவியல் இல்லையென்றால் மக்களாட்சி இருளில் மாண்டு விடும்’ என்று உலக பத்திரிகை சுதந்திர நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். உலக பத்திரிகை சுதந்திர நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: ஊடக சுதந்திரத்துக்கான உலக தரவரிசை பட்டியலில் இந்தியாவின் இடம் 151 என படுபாதாளத்தில் உள்ளது. காரணம் என்ன? ஏனென்றால், ஒன்றிய பாஜ ஆட்சி கேள்விகளை கண்டாலே அஞ்சுகிறது. ஊடக அலுவலகங்களில் ரெய்டு நடத்துகிறது. செய்தியாளர்களை சிறையில் தள்ளுகிறது.
பாஜ அரசின் ஊழல்கள், உரிமை மீறல்கள் மற்றும் பெரும்பான்மைவாத போக்கை அம்பலப்படுத்துவோர்களை அடக்குகிறது. உலக பத்திரிகை சுதந்திர நாளான இன்று, ‘யாருக்கும் அஞ்சாத ஊடகவியல் இல்லையென்றால் மக்களாட்சி இருளில் மாண்டு விடும்’ என்பதை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்வோம். அதனால்தான், பத்திரிகை சுதந்திரத்தை காப்பது என்பது ஊடகங்களுக்காக மட்டும் அல்ல, குடிமக்கள் அனைவரின் கேள்வி கேட்கும், உண்மையை அறிந்துகொள்ளும், அதிகாரத்தை நோக்கி உண்மையை உரைக்கும் உரிமைக்கானதாக ஆகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.