கூடலூர்: கூடலூர் பகுதியில் சாலை ஓரங்களில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்மேற்கு பருவமழை காலம் துவங்கி உள்ள நிலையில் சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்து அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மின் கம்பிகளின் மீது மரங்கள் விழுவதால் மின் கம்பிகளும் அறுந்து மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இது போன்ற ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை கண்டறிந்து அவற்றின் கிளைகளை வெட்டி அகற்றுவது, தேவைப்பட்டால் மரங்களை முழுமையாக வெட்டி அகற்றுவது போன்ற நடவடிக்கைகளை பருவமழை காலத்திற்கு முன்பே மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.
சாலை ஓரங்களில் இன்னும் பல இடங்களில் மழைக்காலத்தில் சரிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் காணப்படுகின்றன. இதே போல் வீடுகள் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளின் மீது விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் விரைவாக அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரம் தொடர்ச்சியாக பெய்த காற்றுடன் கூடிய மழை கடந்த இரண்டு நாட்களாக குறைந்து காணப்பட்டது. பகல் நேரங்களில் வெயில் அடித்தது. கூடலூர் பகுதியில் நேற்று மதியத்திற்கு மேல் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.