டெல்லி : டெல்லியில் நடைபெற்ற NCERT கவுன்சில் கூட்டத்தில், பி.எம்.ஸ்ரீ திட்டம் மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு அரசு அதிகாரிகள், ஒன்றிய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டம் மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை ஹிந்துத்துவா கொள்கையாக உள்ளது என்றும் சமஸ்கிருதம், இந்தியை திணிப்பதற்கு தான் ஒன்றிய அரசு முயற்சி செய்து வருவதாகவும் தமிழக அரசு எதிர்ப்பை பதிவு செய்தது.
இதே போன்று இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கேரள அரசும், ஆங்கில புத்தகங்களில் இந்தி பெயர்களை திணிப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இதனிடையே மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்தப்பின் கேரள கல்வித் துறை அமைச்சர் சிவன் குட்டி டெல்லியில் அளித்த பேட்டியில், “பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர மறுப்பதால் கல்வி நிதி வழங்காத மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தமிழ்நாடு அரசுடனும் ஆலோசனை நடத்தப்படும்,”இவ்வாறு குறிப்பிட்டார்.