Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

டெல்லியில் பார்க்கிங் பிரச்னையில் பிரபல தமிழ் நடிகையின் சகோதரர் குத்திக் கொலை: வெறிச்செயலில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

புதுடெல்லி: டெல்லியில் பைக்கை பார்க்கிங் செய்யும் பிரச்னையில் பிரபல தமிழ் நடிகை ஹூமா குரேஷியின் சகோதரர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெறிச்செயலில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி. இவர் தமிழில் ரஜினியுடன் காலா, அஜீத்குமாருடன் வலிமை ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஹூமா குரேஷியின் தந்தை சலீம் குரேஷியின் சகோதரரின் மகன் ஆசிப் குரேஷி (42). இவர் தெற்கு டெல்லியின் போகல் பகுதியில் மனைவியுடன் வசித்து வந்தார். ஆசிப் அதே பகுதியில் கோழிக்கறி வியாபாரம் செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆசிப் குரேஷியின் வீட்டின் வாசல் முன்பாக வாலிபர் ஒருவர் பைக்கை நிறுத்திவிட்டு, அதன் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார். இதனை கவனித்த ஆசிப், பைக் ஓரமாக நிறுத்துமாறு அவரிடம் கூறினார். அப்போது ஆசிப்பின் மனைவி ஷாஹீனும் அருகில் இருந்தார். ஆனால், வாலிபர் பைக்கை நகர்த்த மறுத்ததுடன் ஆசிப்பை திட்டத் தொடங்கினார். இதை ஆசிப் தட்டிக்கேட்டபோது, வாலிபருடன் மேலும் ஒரு நபர் சேர்ந்து கொண்டு அவருடன் தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இந்த தகராறு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் கூர்மையான ஆயுதத்தால் ஆசிப்பின் மார்பில் மாறிமாறி குத்தினர்.

இதில் ஆசிப் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதை கண்டு அதிர்ந்துபோன அவரது மனைவி அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போகல் பகுதிக்கு விரைந்த போலீசார், இது குறித்து விசாரித்தனர். ஆசிப்பை குத்திக் கொலை செய்த அதே பகுதியை சேர்ந்த உஜ்வால் (19) கவுதம் (18) ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்தனர். அவர்கள் இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.