மும்பை: அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான ரக்பி விளையாட்டு இந்தியாவிலும் விளையாடப்படுகிறது. ரக்பி பிரிமீயர் லீக் (ஆர்பிஎல்) போட்டியின் முதல் தொடர் மும்பையில் ஜூன் 15ம் தேதி தொடங்கியது. மொத்தம் 6 அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன. ரவுண்ட் ராபின் முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோதின. லீக் சுற்று முடிவில் ஐதராபாத் ஹீரோஸ், சென்னை புல்ஸ், பெங்களூர் பிரேவ் ஹார்ட்ஸ், டெல்லி ரெட்ஸ் அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
முதல் அரையிறுதியில் சென்னை 31-12 என்ற புள்ளி கணக்கில் பெங்களூர் அணியை வீழ்த்தியது. 2வது அரையிறுதியில் டெல்லி 14-7 என்ற புள்ளிக் கணக்கில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த ஹைதராபாத்தை நசுக்கியது. தொடர்ந்து நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை- டெல்லி அணிகள் மோதின. அதில் அதிரடியாக விளையாடிய சென்னை, எதிரணியான டெல்லியை ஒரு புள்ளி கூட எடுக்க விடவில்லை. ஆட்டத்தின் முடிவில் 41-0 என்ற கணக்கில் அபார வெற்றியை ருசித்த சென்னை, ரக்பி பிரிமீயர் லீக்கின் முதல் சாம்பியன் என்ற சாதனையை படைத்தது.