புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 2015 மற்றும் 2020ம் ஆண்டுகளில் பிரதமர் மோடி புகழின் உச்சத்தில் இருந்த போது, டெல்லியில் ஆம் ஆத்மி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. எனவே தற்போதைய தேர்தல் முடிவு என்பது, மோடியின் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி அல்ல, அது, கெஜ்ரிவாலின் வஞ்சகம், ஏமாற்றுதல் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட சாதனை அரசியலை நிராகரிப்பதற்கான வாக்கெடுப்பு.
அவரது 12 ஆண்டுகால தவறான ஆட்சி குறித்து வாக்காளர்கள் தங்கள் தீர்ப்பை அறிவித்துள்ளனர். கெஜ்ரிவாலின் பல்வேறு மோசடிகளை வெளிக்கொண்டு வருவதில் காங்கிரஸ் முக்கிய பங்காற்றி உள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்த்தோம். ஆனாலும் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. 2030ல் டெல்லியில் மீண்டும் காங்கிரஸ் அரசு அமையும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.