Saturday, June 14, 2025
Home செய்திகள்Showinpage டெல்லி நெருக்கடியால் அவசர அவசரமாக சென்னைக்கு வந்தார் பாஜ தூதர்களுடன் ராமதாஸ் ரகசிய சந்திப்பு: கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை

டெல்லி நெருக்கடியால் அவசர அவசரமாக சென்னைக்கு வந்தார் பாஜ தூதர்களுடன் ராமதாஸ் ரகசிய சந்திப்பு: கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை

by Karthik Yash

விழுப்புரம்: தைலாபுரம் தோட்டத்தில் மகன் அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் கூட்டணிக்கு சம்மதிக்காமல் ராமதாஸ் போக்குகாட்டி வருவதால் சிபிஐ வழக்கு, மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினர் கொலை வழக்கை தூசி தட்டி எடுத்து பாஜ நெருக்கடி கொடுக்க முயற்சித்து வருகிறது. இதை சமாளிக்கவே நேற்று திடீரென அவசர அவசரமாக சென்னை வந்த ராமதாஸ், தி.நகரில் உள்ள ஏ.கே.மூர்த்தி வீட்டில் ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமியை சந்தித்து கூட்டணி குறித்து பேசி உள்ளார்.

இந்தியாவில் பாஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அதிகாரம், ஆட்சியை பிடிக்க அதற்கான வியூகங்களை வகுத்து அக்கட்சி தலைமை செயல்பட்டு வருகிறது. மாநில கட்சிகளை கூட்டணிக்குள் இழுப்பதும், ஒத்துவராத பட்சத்தில் அமலாக்கத்துறை, சிபிஐ வழக்குகளை காட்டி மிரட்டுவது, அல்லது கட்சியை உடைப்பது போன்ற சித்து விளையாட்டில் ஈடுபட்டு வருவதாக பாஜ மீது குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. மகாராஷ்டிரா, கர்நாடகா, வடகிழக்கு மாநிலங்களில் தனது சித்து விளையாட்டை காட்டிய பாஜ, தென் மாநிலங்களில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

புதுச்சேரி, தெலங்கானாவில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி கட்சியை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக தெலங்கானாவில் சந்திரசேகரராவ் குடும்பத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி அவர்களை பாஜவுக்குள் இழுத்து வர முயற்சித்து வருகின்றனர். இதற்கு சந்திரசேகரராவ்வின் மகன் சம்மதம் தெரிவித்து உள்ள நிலையில், மகள் கவிதா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தென் மாநிலங்களில் பாஜ காலூன்ற முடியாத மாநிலமாக இருப்பது தமிழ்நாடுதான். இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு சித்து வேலைகளில் பாஜ ஈடுபட்டு வருகிறது.

ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி வருகின்றன. தமிழகத்தில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. பாஜ தலைமையில் வலுவான கூட்டணி அமைத்து இந்த தேர்தலை எதிர்கொள்ள முயற்சித்து வருகிறது. இதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு அடிக்கடி படையெடுத்து வருகிறார். அதன்படி கடந்த ஏப்ரலில் தமிழகத்திற்கு வந்த அமித்ஷா, கூட்டணி வர மறுத்த எடப்பாடியை அவர் மீது உள்ள பல்வேறு ஊழல் வழக்குகள், அவரது உறவினர் மீது உள்ள அமலாக்கதுறை வழக்குகள் மற்றும் எடப்பாடி தலைமையில் நடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழல் வழக்குகளை காட்டி மிரட்டி கூட்டணியை உறுதி செய்துவிட்டு சென்றார்.

2021 சட்டமன்ற தேர்தலில் பாஜ கூட்டணியால்தான் படுதோல்வியடைந்தோம் என்று அதிமுக மாஜி மூத்த அமைச்சர்கள் சி.வி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் வெளிப்படையாகவே குற்றம்சாட்டினர். இதனால் தான் கடந்த மக்களவை தேர்தலில் பாஜை கழட்டிவிட்டு தனியாக தேர்தலை சந்தித்தனர். ஆனால் வரவுள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு அக்கட்சியின் மூத்த மாஜி அமைச்சர்கள் மீதான வழக்குகள், இபிஎஸ் மீதான வழக்குகளை சுட்டிகாட்டி அதிமுகவை மிரட்டி அடிபணியவைத்து அதிமுகவை அமித்ஷா மீண்டும் கூட்டணிக்குள் சேர்த்து விட்டார்.

அதேபோல், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டனியில் இருந்து அதிமுக வெளியேறியதால் கடைசி நேரத்தில் வடமாவட்டங்களில் கனிசமான வாக்குவங்கி வைத்துள்ள பாமகவுடன் கூட்டணியை உறுதி செய்து ராமதாசுக்கே தெரியாமல் அதிகாலையில் தைலாபுரத்தில் தடபுடல் விருந்து வைக்கப்பட்டது. பின்னர், ராமதாஸை அன்புமணி மற்றும் பாஜ தலைவர்கள் அழைத்து கொண்டு சேலத்தில் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போதும், அன்புமணி மீது உள்ள சிபிஐ வழக்கை சுட்டிகாட்டி மிரட்டியே கூட்டணிக்கு அடிபணிய வைத்ததாக பாமக தலைவர்களே பேசி கொண்டனர். இதனால் பாஜ கூட்டணியில் இருந்து வெளியேற ராமதாஸ் திட்டமிட்டார். ஆனால் பாமகவை கூட்டணியில் தொடர வைக்க பல்வேறு ரகசிய வேலைகள் அன்புமணி மூலம் பாஜ நடத்தியது.

கடந்த முறை அமித்ஷா வந்தபோதே பாமக தலைவர் அன்புமணியை அழைத்து கூட்டணி ஒப்பந்தம்போடுவதற்கான ஏற்பாடுகளை பாஜ செய்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த கூட்டணியை விரும்பாத பாமக நிறுவனர் ராமதாஸ், அமித்ஷா வருகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாகவே, கட்சிக்கு நான்தான் தலைவர், கூட்டணி முடிவை நான்தான் எடுப்பேன் என்று அறிவித்து பாஜ கூட்டணிக்கு செக் வைத்தார். இதன்பிறகு தான் பாமகவில் மனதளவில் இருந்த தந்தை, மகன் மோதல் வெளிப்படையாக வெடிக்க துவங்கியது.

ஒருகட்டத்தில் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறிய ராமதாஸ், ‘கடந்த முறை பாஜவுடன் கூட்டணி வைக்க வேண்டும் அன்புமணியும், சவுமியாவும் காலை பிடித்து கெஞ்சினர். இல்லையென்றால் எனக்கு கொள்ளி வையுங்கள் என்று அன்புமணி கூறினார்’ என்று வெளிப்படையாகவே போட்டுடைத்தார். ராமதாசின் இந்த பேச்சு அன்புமணிக்கு மட்டுமல்லாமல் பாஜவுக்கும் பெரும் சங்கடத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. இதனிடையே மதுரைக்கு அமித்ஷா வருவதற்கு முன்பே தந்தை, மகன் மோதலை முடிவுக்கு கொண்டு வந்து பாமகவை கூட்டணிக்குள் அழைத்து வரும் வேலையை பாருங்கள் என பாஜ மேலிடம் உத்தரவிட்டிருந்தது.

இதனால் பாஜ ஆலோசனைப்படி இருநாட்களுக்கு முன்பு அன்புமணி திடீரென தைலாபுரம் தோட்டத்துக்கு வந்து ராமதாசை சந்தித்து பேசினார். இதன் பின் பாஜ தூதர்களான ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை சந்தித்து 3 மணி நேரம் பேசினர். முதலில் கட்சியில் உள்ள குழப்பங்களை பேசி தீர்த்துவிட்டு பிறகு கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கிறேன் என ராமதாஸ் கூறிவிட்டதால் பாஜவின் தூதுவர்கள் தைலாபுரம் தோட்டத்திலிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறினர்.

அமித்ஷா மதுரை விசிட்டுக்கு முன்பே பாமகவை சரிகட்டிவிடலாம் என நினைத்த பாஜவின் முயற்சி படுதோல்வியில் தான் முடிந்தது. இதையடுத்து சென்னை திரும்பிய ஆடிட்டர் குருமூர்த்தியை அன்புமணி ரகசியமாக சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பல்வேறு தரப்பில் இருந்து சமாதானப் பேச்சு நடத்தியும் கூட்டணிக்கு ராமதாஸ் பிடிகொடுக்காமல் தொடர்ந்து, போக்குகாட்டி வருவதால் பாஜ அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அன்புமணி மீதுள்ள சிபிஐ வழக்கை தூசி தட்டி எடுப்பது, அதிமுக மாஜி அமைச்சர் சி.வி சண்முகம் வீட்டில் நடந்த கொலை வழக்கில் பாமக பிரமுகர்கள் மீதான வழக்கை தோண்டி எடுத்து நெருக்கடி கொடுப்பது, கட்சியை இரண்டாக பிளப்பது என அடுத்தடுத்து நெருக்கடி வேலைகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.

இருநாட்களுக்கு முன்பு தைலாபுரம் வந்த பாஜ தூதர்கள் வழக்கு தொடர்பான ஆவணங்களை மிரட்டி விட்டுசென்றதாகவும், கூட்டணிக்கு உடன்படாவிட்டால் எதிர்விளைவுகளை சந்திக்கநேரிடும் என்று மிரட்டல் தொனியில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் சென்னையில் பாஜ தூதருடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த அவசர அவசரமாக நேற்று காலை தைலாபுரத்தில் இருந்து ராமதாஸ் சென்னை வந்து உள்ளார். ராமதாஸ் பனையூரில் டிரிப்ட் உட் கார்டனில் உள்ள மூத்த மகள் காந்தி வீட்டில் இருந்தார். இந்நிலையில், நேற்று மாலை ராமதாஸ் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார்.

பல இடங்களுக்கு சென்ற கார், கடைசியாக தி.நகரில் உள்ள ஏ.கே.மூர்த்தி மகன் இல்லத்திற்கு ராமதாஸ் கார் சென்றது. அங்கு பாஜ தூதர்கள் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகியோர் வந்தனர். அவர்கள் ராமதாசிடம், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அன்புமணியுடனான மோதல் போக்கை கைவிட்டு, ஒன்றாக இணைந்து கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறி ராமதாஸை சமாதானம் செய்யும் முயற்சியில் பாஜ தூதர்கள் ஈடுபட்டனர். வரும் செவ்வாய்கிழமை செய்தியாளர்களை சந்திப்பதாக ராமதாஸ் தெரிவித்து உள்ளார். அப்போதுதான், பாஜ மிரட்டலுக்கு ராமதாஸ் அடிபணிவாரா? எதிர்த்து நிற்பாரா? என்பது தெரியவரும்.

இதுகுறித்து பாமக நிர்வாககிகள் கூறுகையில், ‘கடந்த மக்களவை தேர்தலில் பாஜவுடன் கூட்டணியில் சேர்ந்து போட்டிட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வியடைந்து, கட்சியின் அங்கீகாரத்தையும் பாமக இழந்தது. அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் ஓரிரு இடங்களில் வெற்றிபெற்றிருக்கலாம் என்று ராமதாசும் தெரிவித்தார். அன்புமணி கழுத்தில் தொங்கும் சிபிஐ வழக்கை காட்டி கூட்டணிக்கு சம்மதிக்க வைத்தார்கள். ஆனால், இப்போது அது எங்கள் நிறுவனரிடம் பலிக்காது. ஆடிட்டர் குரூமூர்த்தி 3 மணிநேரத்திற்கு மேலாக பேசியும் ராமதாஸ் மசியவில்லை. கடைசியில் மிரட்டும் தோரணையில் கூட பேசியதாக கூறப்படுகிறது. எத்தனையோ வழக்குகள், எவ்வளவோ சிறைகளை பார்த்தவர் அவர் அவரை மிரட்டி பணியவைக்க முடியாது’ என்றனர்.

* அன்புமணி மீதுள்ள சிபிஐ வழக்கு, அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினர் கொலை வழக்கை மீண்டும் எடுத்து நெருக்கடி கொடுக்க பாஜ திட்டமிட்டுள்ளது.
* தைலாபுரம் வந்த பாஜ தூதர் வழக்கு தொடர்பான ஆவணங்களை காட்டி மிரட்டி, கூட்டணிக்கு உடன்படாவிட்டால் எதிர்விளைவுகளை சந்திக்கநேரிடும் என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது.

* அமித்ஷாவை சந்திக்க திட்டமா?
சென்னை, தி.நகரில் பாஜ தூதர்களை சந்தித்த பின் வெளியே வந்த பாமக நிறுவனர் ராமதாசிடம், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பீர்களா? என்ற நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கப் போவதில்லை’ என்றார். தொடர்ந்து, குருமூர்த்தியை சந்தித்தீர்களா? என்று கேட்டதற்கு, தைலாபுரத்தில் பதில் தருகிறேன் என்று கூறிவிட்டு ராமதாஸ் புறப்பட்டு சென்றார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi