டெல்லி: டெல்லி பிரகதி மைதானத்தில் இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சி அரங்கில் தமிழ்நாடு நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியானது நவம்பர் 14 ம் தேதி முதல் 27 ம் தேதி வரை 14 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பொருட்காட்சியில் இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்கள், இந்திய யூனியன் பிரதேசங்கள், அரசு சார்பு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்று தங்களது அரசின் வளர்ச்சித் திட்டங்கள், சாதனைகள், கொள்கைகள் போன்றவற்றை காட்சிப்படுத்தியும், வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது நாட்டில் தயாரிக்கப்படும் முக்கியப் பொருட்களைச் சந்தைப்படுத்தியும் வருகின்றன.
தமிழ்நாடு சார்பில் அமைக்கப்பட்ட அரங்கை தமிழ் வளர்ச்சி செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். நடப்பாண்டில், இப்பொருட்காட்சிக்கான கருப்பொருள் -“உலகம் ஒரே குடும்பம் – வர்த்தகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது”. தமிழ்நாடு சார்பில் அமைக்கப்பட்ட அரங்கில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.சுற்றுலாத்துறை, கைத்தறி உள்ளிட்ட பல துறைகளின் சார்பாக அரங்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. அரங்கங்களில் பல்வேறு துறைகளில் தயாரான பொருட்கள் மக்களின் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், சலங்கையாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட காலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தமிழ்நாடு சிறு தொழில்கள் வளர்ச்சிக் கழகம் வேளாண்மைத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத் துறை, சுற்றுலாத்துறை, தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் கழகம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (Co-optex) ஆகிய 12 துறைகள் சார்பில் அரங்குகள் வைக்கப்பட்டுள்ளன.