புதுடெல்லி: சமீப நாட்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், ஒன்றிய சுகாதாரத்துறையின் சமீபத்திய தரவுகளின் படி நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு நான்காயிரத்தை தாண்டிவிட்டது. கடந்த 2023ம் ஆண்டு கொரோனா மாதிரிகள் சேகரிக்கும் முறை மற்றும் சேகரிக்கும் மையங்கள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உத்தரவிடக்கோரி கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
மேற்கண்ட வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அனீஸ் தயாள் அமர்விக் விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘தற்போதைய சூழலில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தனது தரப்பின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். கொரோனா பரிசோதனை மாதிரியே சேகரிக்கும் முறை குறித்த நிலை அறிக்கையை ஒன்றிய அரசு தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.