டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை ஆக.8ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தாலும் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் உள்ளார்.
மக்களவைத் தேர்தலின் போது பரப்புரை மேற்கொள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. தேர்தல் நிறைவடைந்த பிறகு ஜூன் 2 ம் தேதி மீண்டும் திகார் சிறையில் சரண் அடைந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி திகார் சிறையிர் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி மீண்டும் தாக்கல் செய்த மனு கடந்த 12ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் 90 நாட்களுக்கும் மேலாக சிறையில் கஷ்டப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் சிபிஐயும் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்திருந்ததால் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், இதை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு இன்று டில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 8ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.