டெல்லி: டெல்லியில் மாரடைப்பால் உயிரிழந்த ஏர் இந்தியா விமானி குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் ஏர் இந்தியா விமானி மாரடைப்பால் உயிரிழந்தார் கடந்த மூன்று மாதங்களில் உயிரிழக்கும் மூன்றாவது விமானி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி விடுமுறைக்கு பின் ஹிமானில் குமார் என்ற விமானி மீண்டும் பணியில் சேர்ந்திருக்கிறார்.
மருத்துவ பரிசோதனையில் 37 வயதான ஹிமானில் குமார் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக அறிக்கையும் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து பயிற்சி விமானத்தை இயக்குவதற்காக டெல்லி விமான நிலையம் வந்திருக்கிறார். அப்போது அசோகரியமாக உணர்ந்ததை சக பணியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். உடனே சக பணியாளர்கள் விமானிக்கு சிபிஆர் முதலுதவி சிகிச்சை வழங்கியுள்ளனர்.
தொடர்ந்து மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விமானியை விமானநிலைய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே விமானி உயிரிழந்தார். இதனிடையே விமானியின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக விமானிகள் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. இதனை அடுத்து விமானிகளுக்கு பணி நேர கட்டுப்பாட்டை விதித்து மத்திய போக்குவரத்துக்கு கழகம் குறிப்பிட்டிருந்தது.