சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக 5 மாவட்டங்களில் நேற்று 104 டிகிரி வெயில் கொளுத்தியது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 26ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு தென்தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. வட தமிழக கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவியது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் விட அதிகரித்து காணப்பட்டது. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதியில் 104 டிகிரி வரை வெயில் கொளுத்தியது.
மலைப் பகுதிகளில் குறைந்த வெப்பநிலை நிலைவியது. தஞ்சாவூர், கரூர், திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் குறைந்து காணப்பட்டது. வெயிலைப் பொருத்தவரையில் அதிகபட்சமாக வேலூர், மதுரை, கரூர், ஈரோடு,திருச்சி மாவட்டங்களில் 102 டிகிரி முதல் 104 டிகிரி வரை கொளுத்தியது.
சென்னை 100 டிகிரி, கடலூர், தர்மபுரி, சேலம், தஞ்சாவூர், திருப்பத்தூர் 99 டிகிரி, நாகப்பட்டினம் 97 டிகிரி வெயில் நிலவியது. ஒரு சில இடங்களில் அதிகரித்து காணப்பட்ட வெயில் காரணமாக பல்வேறு இடங்களில் சிலர் மயங்கி விழுந்துள்ளனர். அதனால் வெயில் நேரத்தில் வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். இந்நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 26ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரியாக இருக்கும். வெப்பநிலையை பொருத்தவரையில் தமிழகம், புதுச்சேரியில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்படும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் , குறநை்த பட்ச வெப்பநிலை இயல்பைவிட ஒரு சில இடங்களில் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்பதால் அசவுகரியம் ஏற்படலாம்.