சென்னை: ‘‘பத்திரப்பதிவு துறையில் நடப்பாண்டிற்கு ரூ.25,000 கோடி வருவாய் பெற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளடுது’’ என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறினார். சென்னையில் உள்ள பதிவுத்துறை அலுவலகங்களில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி விருகம்பாக்கம் மற்றும் கோடம்பாக்கத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில், நிலுவையில் உள்ள பத்திரங்கள் போன்ற விவரங்கள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
பின்னர் நிருபர்களை சந்தித்து அமைச்சர் மூர்த்தி கூறுகையில் :பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பொதுமக்களுக்கு சிரமம் இன்றி பத்திரங்களை விரைவில் பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டிற்கு ரூ.25,000 கோடி வருவாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பதிவு செய்யும் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவுத் துறையில் ஸ்டார் 3.0 என்ற மென்பொருள் திட்டம் விரைவில் செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் மூலம் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பத்திரப்பதிவுத்துறையில் உள்ள குறைபாடுகள் களையப்படும். பதிவுத்துறையில் இடைத்தரகர்களை அனுமதிக்க கூடாது. உரிமையாளர்களே நேரடியாக பதிவு செய்ய வேண்டும். மேலும் போலி பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையில் போலி பத்திரப்பதிவுகளை கண்டறிய அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர் என்றார். ஆய்வின் போது, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.