சென்னை: பத்திரப்பதிவில் நேற்று (18.10.2023) ஒருநாள் மட்டும் பதிவுத்துறை ரூ.180 கோடி வருவாய் ஈட்டியது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியான அறிக்கையில்; “அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் சுபமுகூர்த்த தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் நேற்று (18.10.2023) ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் வழங்கப்பட்டன. அதன் விளைவாக நேற்று மட்டும் ஒரே நாளில் ரூ.180 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது.
சுபமுகூர்த்த தினமாக கருதப்படும் ஐப்பசி மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையான எதிர்வரும் 20.10.2023 அன்றும் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என எதிர்பார்க்கப்படுவதால் 20.10.2023 அன்று கூடுதலாக முன்பதிவு வில்லைகள் வழங்கப்பட வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் ஒரு சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு உள்ள சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும். 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.