Friday, January 17, 2025
Home » அவசரநிலை அறிவிப்புக்கு எதிர்ப்பு தென்கொரிய அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்:  நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயற்சி: பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் தோல்வி

அவசரநிலை அறிவிப்புக்கு எதிர்ப்பு தென்கொரிய அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்:  நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயற்சி: பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் தோல்வி

by Arun Kumar

சியோல்: ஆளும் கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பை புறக்கணித்ததால் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலை பதவி நீக்கம் செய்ய கோரி கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது. வடகொரியா தென்கொரியா நாடுகளின் நீண்டநாள் மோதலால் கொரிய தீபகற்பத்தில் எப்போதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. தென்கொரியாவுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் இணைந்து கூட்டு ராணுவ போர் பயிற்சிகளை நடத்துவது, தென்கொரியாவில் அமெரிக்காவின் குண்டு வீசும் விமானங்கள், அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் போன்ற சக்தி வாய்ந்த ராணுவ தளவாடங்கள் நிறுத்தி வைப்பு போன்ற நடவடிக்கைகள் வடகொரியாவை எரிச்சலடைய வைத்துள்ளது.

தென்கொரியாவில் அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஆளும் யூன் சுக் இயோல் தலைமையிலான மக்கள் சக்தி கட்சிக்கும், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியை சேர்ந்த பல எம்பிக்கள் எதிர்க்கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை(டிச.5) தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல், “எதிர்க்கட்சியினர் வடகொரியாவுடன் சேர்ந்து கொண்டு தென்கொரிய அரசை முடக்க முயற்சிக்கின்றனர். எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்துகின்றனர். வடகொரியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றனர். நாட்டில் அரசுக்கு எதிரான சக்திகளை ஒழிப்பதற்காக அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது” என அறிவித்தார்.

அதிபரின் இந்த திடீர் அறிவிப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிபரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வாயில்முன் குவிந்த மக்கள் அதிபருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். உடனே அங்கு குவிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்களை தாக்கினர். இதனால் மக்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆனால் அவசர நிலையை அறிவித்த சில மணி நேரங்களிலேயே அதை வாபஸ் பெறுவதாக அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்தார். இதையடுத்து தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அந்நாட்டு ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தன.

இந்த தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 195 வாக்குகள் பதிவாகின. ஆளும் கட்சியை சேர்ந்த 3 உறுப்பினர்கள் மட்டுமே வாக்கெடுப்பில் பங்கேற்றனர். மற்றவர்கள் வாக்கெடுப்பை புறக்கணித்து வௌியேறினர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு 192 வாக்கு கிடைத்தன. தென்கொரியா நாடாளுமன்றத்தில் அதிபரை பதவி நீக்கம் செய்ய மொத்தம் உள்ள 300 உறுப்பினர்களில் 200 பேர் ஓட்டு போட வேண்டும். ஆனால் 192 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் அதிபர் யூன் பதவி நீக்கத்துக்கு எதிரான தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனிடையே, அவசரநிலை பிரகடனத்தால் மக்கள் அடைந்த சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்டு கொள்வதாக யூன் சுக் இயோல் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

5 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi