சென்னை: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழை பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கி டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் (நேர்முக தேர்வு பதவிகள்) 2 அடங்கிய கால்நடை உதவி மருத்துவர், கணக்கு அலுவலர் நிலை 3, கல்லூரி நூலகர், மேலாளர் (கிரேடு 3) (நிதி), முதுநிலை அலுவலர் (நிதி), உதவி மேலாளர் (கணக்கு), உதவி பொது மேலாளர் (திட்டங்கள் முதலீடு), உதவி மேலாளர் (திட்டங்கள்), உதவி பொது மேலாளர் (நிதி), கணக்கு அலுவலர், உதவி இயக்குனர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் சரிபார்ப்பு செய்த பின்னர், சில விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களை
குறைபாடாக, சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக 9ம் தேதி(இன்று) முதல் வருகிற 23ம் தேதி இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல் விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் அனைவரும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறை பதிவு (ஓடிஆர்) வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் கோரிக்கை விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.