நான் முதல்வன் யுபிஎஸ்சி முதன்மைத்தேர்வு ஊக்கத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க காலக்கெடு: வரும் 13ம்தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
சென்னை: தமிழ்நாடு அரசின் யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 13ம் தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: 2025ம் ஆண்டின் யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக ரூ.25,000 நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் அறிவிக்கை https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc registration/ என்ற இணையதளத்தில் கடந்த 21ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஆன்லைன் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 2ம் தேதி. இந்நேர்வில், பெரும்பாலான ஆர்வலர்கள் இருப்பிடச் சான்று, பிறப்பிடச் சான்று கோரி விண்ணப்பித்துள்ளதால், நான் முதல்வன் யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டி கோரிக்கைகள் எழுந்துள்ளதை கருத்தில் கொண்டு, திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 2ம் தேதியிலிருந்து வரும் 13ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



