நாமக்கல்: காதலிப்பதால் திருமணத்துக்கு மகள் மறுத்ததால், திருச்சி ஆர்.டி.ஓ., மனைவியுடன் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல் மோகனூர் ரோடு கலைவாணி நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (56). திருச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலராக (ஆர்டிஓ) பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா (55). இவர் மோகனூர் அருகே ஆண்டாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகன் ஆதித்யா (23), புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில், எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியவில் ஆர்டிஓ சுப்பிரமணியும், அவரது மனைவி பிரமிளாவும் வீட்டில் இருந்து டூவீலரில் வெளியே புறப்பட்டு சென்றனர். வீட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வகுரம்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகில் சென்று, டூவீலரை நிறுத்தியுள்ளனர். பின்னர், இருவரும் தண்டவாள பகுதிக்கு சென்றனர். அப்போது சரக்கு ரயில் ஒன்று வருவதை பார்த்ததும், இருவரும் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துக் கொண்டனர்.
அவர்கள் மீது சரக்கு ரயில் ஏறிச் சென்றது. இதில் தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர். அதிகாலை வேளையில் அவ்வழியே வந்தவர்கள் இதை பார்த்து, நாமக்கல் ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்தனர். அவரது புகாரின் பேரில், சேலம் ரயில்வே போலீசார் இருவரது சடலத்தையும் கைப்பற்றி, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், ஆர்டிஓ சுப்பிரணியும், பிரமிளாவும் பிஇ படித்துள்ள தங்களது மகளுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதற்காக பல இடங்களில் வரன் பார்த்துள்ளனர். அவர்கள் பார்த்த மாப்பிள்ளைகளை பிடிக்கவில்லை என மகள் கூறி வந்துள்ளார். மேலும், அவரது மகள் வேறு ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக தெரியவந்துள்ளது. அதுதொடர்பாக மகளிடம் கேட்டு, நேற்று முன்தினம் இரவு இருவரும் தகராறு செய்துள்ளனர். பின்னர், அதிகாலை வேளையில் வீட்டில் மகள் இருக்கும் நிலையில், தனியாக எழுந்து வந்து, ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.