சென்னை பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையிலும் பொதுமக்களுக்கு ஆவின் நிறுவனம் மூலம் 100% பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆவின் நிறுவனம் எடுத்த அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பொதுமக்களுக்கு தேவையான பால் 100 சதவீதம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று சுமார் 15 லட்சம் லிட்டர் பால் 25,000 பாக்கெட் யூஎச்டி பால் மற்றும் 10,000 கிலோ பால் பவுடர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
கனமழை இருந்த போதிலும் பால் விநியோகத்தில் எவ்வித சிறு தடையும் ஏற்படவில்லை. மேலும் சென்னை மாநகராட்சி உடன் இணைந்து தேவைப்படும் முகாம்களுக்கு ஆவின் பால், பால் பவுடர் மற்றும் யூஎச்டி பால் உடனுக்குடன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை முழுவதும் உள்ள அனைத்து பாலகங்களிலும் பால் மற்றும் பால் பொருட்கள் போதுமான அளவு இருப்பு வைத்து விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் பொது மக்களுக்கு பால் எளிதில் கிடைக்க 8 ஆவின் பாலகங்கள் மூலமாக 24 மணி நேரமும் பால் விநியோகம் நடைபெற்று வருவதாக ஆவின் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


