Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சைக்கிளிங் வீராங்கனை நிறைமதிக்கு அதிநவீன சைக்கிளிங் உபகரணம் வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டினை உருவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதனடிப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையை துவக்கி அந்த நிதியில் இருந்து விளையாட்டு உபகரணங்கள் வாங்க நிதியுதவி வழங்கப்படுவதுடன், வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கவும், விளையாட்டு வீரர்கள் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பங்குபெறும் வகையில் சிறப்பு பயிற்சிகள் மேற்கொள்ளவும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (9.6.2025) தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை நிதியிலிருந்து துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சி.மதுமிதா அவர்களுக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கான உபகரணங்களை வாங்க 1,74,000 ரூபாய்க்கான காசோலையும், துப்பாக்கி சுடுதல் வீரர் தி.எஸ்வந்த் குமார் அவர்களுக்கு 4,65,450 ரூபாய்க்கான காசோலையும், வாள்வீச்சு வீரர் மோ.நிதிஷ் அவர்களுக்கு 1,49,555 ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.

மேலும் சைக்கிளிங் வீராங்கனை ஜே.நிறைமதி அவர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 9.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான அதிநவீன சைக்கிளிங் உபகரணத்தையும், சைக்கிளிங் வீராங்கனை ஜெ.பி.தன்யதா அவர்களுக்கு சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியாவில் சிறப்பு பயிற்சி மேற்கொள்ள 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.

தொடர்ந்து கிரிக்கெட் வீராங்கனைகள் ஜெ.சஹானா மற்றும் ஜெ.நேகா ஆகியோருக்கு சர்வதசே கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் வகையிலான சிறப்பு பயிற்சி பெற தலா ரூ.90 ஆயிரத்திற்கான காசோலைகள், தமிழ்நாடு சைக்கிளிங் லீக் போட்டியை நடத்தியதற்காக தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத்திற்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை என மொத்தம் 34.19 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் விளையாட்டு உபகரணங்களை சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

சைக்கிளிங் வீராங்கனை ஜே. நிறைமதி அவர்கள் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மலேசியாவில் நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் சைக்கிளிங் போட்டியில் வெண்கலப்பதக்கமும், 2025 ஏப்ரல் மாதம் டெல்லியில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு சைக்கிளிங் டிராக் போட்டியில் தனிப்போட்டி மற்றும் குழுப்போட்டிகளில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி உள்பட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.