டெல்லி : எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடமாற்றத்தை நிறுத்தி வைக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ஒன்றிய ரிசர்வ் போலீஸ் படையில், வீரர்களுக்கு இடமாற்றம் தொடர்பான உத்தரவுகளை நிறுத்தி வைக்கவும் வீரர்களுக்கு பயிற்சியை ஒத்திவைக்கவும், சிஆர்பிஎப் தலைமையகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சிஆர்பிஎப் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் தங்களுடைய பணி இடங்களிலேயே இருக்க வேண்டும் என்றும் எந்த ஒரு அவசர நிலைக்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு சி.ஆர்.பி.எப்-பின் 2,400 வீரர்கள் தற்போது காஷ்மீருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகள் தொடரும் வாய்ப்புகள் உள்ளதால், அதிகபட்ச படை துருப்புக்களின் தேவையை கருத்தில் கொண்டு சிஆர்பிஎப், எல்லைப் பாதுகாப்பு படை, சிஎஸ்ஐஎப், ஐடிபிபி உள்ளிட்ட துணை ராணுவ வீரர்களின் விடுமுறையை ரத்து செய்து உள்துறை அமைச்சகம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.