பெங்களூரு: கூட்ட நெரிசலில் RCB ரசிகர்கள் உயிரிழந்த விவகாரத்தில் கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர், பொருளாளர் ராஜினாமா செய்தனர். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி கோப்பையை வென்றதை அடுத்து கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அருகே நடந்த வெற்றி கொண்டாட்டத்தின் போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 11 பேர் பலியானார்கள். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் வெற்றி பேரணி சோகத்தில் முடிந்தது.
இதனை தொடர்ந்த 11 பேர் பலியானது தொடர்பாக பெங்களூரு அணி மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், போலீஸ் கமிஷனர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆர்சிபி அணி நிர்வாகி நிகில் சோசாலே, டிஎன்ஏ நிறுவனத்தைச் சேர்ந்த சுனில், கிரண் உள்ளிட்ட 4பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
35 ஆயிரம் பேர் அமரக்கூடிய மைதானத்தில், 2 முதல் 3 லட்சம் பேர் வந்திருந்ததால் இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது என்றும், கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு ஆர்சிபி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்றும் காவல்துறை அறிவுறுத்தலை மீறி வெற்றி பெற்ற அடுத்த நாளே வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியதாக ஆர்சிபி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு விசாரணையில், KSCA நிர்வாகிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கர்நாடகாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பொறுப்பேற்று கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் தாமாக முன் வந்து பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தங்களுடைய ராஜினாமா கடிதத்தை உடனடியாக ஏற்குமாறு சங்க தலைவருக்கு செயலாளர் சங்கர் மற்றும் பொருளாளர் ஜெயராம் ஆகியோர் கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். கடிதத்தில் இந்த சம்பவத்தில் எங்களுடைய தவறு மிகச்சிறியது என்றாலும் தார்மீக பொறுப்பேற்று தாங்கள் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளனர்.