போபால்: மபி பா.ஜ ஆட்சியில் கடந்த 18 ஆண்டுகளில் ரூ.2.70 லட்சம் கோடி ஊழல் நடந்ததாக கூறி காங்கிரஸ் கட்சி பட்டியல் வெளியிட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் பா.ஜ ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக சிவராஜ்சிங் சவுகான் உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பா.ஜ சார்பில் போட்டியிடும் 39 பேர் கொண்ட முதல் பட்டியல் வெளியானது. இந்த நிலையில் கடந்த 18 ஆண்டுகளாக பா.ஜ மத்தியபிரதேச மாநிலத்தில் ரூ.2.70 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி பட்டியலிட்டுள்ளது. இதுதொடர்பாக மபி காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கூறியதாவது:
மத்தியப் பிரதேசத்தில் கடந்த 18 ஆண்டுகளில் பாஜ ஆட்சியில் மெகா ஊழல்கள் நடந்துள்ளன. கூகுளில் ‘ஸ்கேம்’ என்று தேடினால், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் படம் தான் வரும் அளவுக்கு ஊழல் மலிந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள சிவராஜ் சிங் சவுகான் அரசு, அதன் 18 ஆண்டு கால ஆட்சியில் மோசடிகளில் உலக சாதனை படைத்துள்ளது. பட்டியல் மிக நீளமானது. ஆனால் காங்கிரஸ் கட்சி சில மெகா ஊழல்களைத்தான் பட்டியலிட்டுள்ளது. 50 சதவீத கமிஷன் ராஜ்ஜியம் மாநிலத்தை ‘ஊழல் மாநிலமாக’ மாற்றியுள்ளது. 2018 மற்றும் 2020 க்கு இடையில் எனது ஆட்சி தான் நடந்தது. நான் 2018 மாதிரி இல்லை.
இப்போது நான் 2023 மாடல். 2019 மக்களவை தேர்தலுக்கான மாதிரி நடத்தை விதிகளின் காரணமாக இரண்டரை மாதங்கள் வீணாகிவிட்டது. இருப்பினும் ஊழல் முறைகேடுகளை விசாரிப்பதை விட, மத்திய பிரதேசத்தை முதலீட்டாளர்களின் மையமாக மாற்றுவதில் கவனம் செலுத்தினேன். ஆனால் மபி பா.ஜ ஆட்சியில் பிரபல வியாபம் ஊழல் (ரூ. 2,000 கோடி), சட்டவிரோத சுரங்கம் (ரூ. 50,000 கோடி), இ-டெண்டர் ஊழல் (ரூ. 3,000 கோடி), ஆர்.டி.ஓ ஊழல் (ரூ. 25,000 கோடி), மதுபான ஊழல் (ரூ. 86,000 கோடி), மகாகல் லோக் (ரூ. 100 கோடி) மின்சார ஊழல் (ரூ. 94,000 கோடி) உள்பட 254 ஊழல்கள் மூலம் ரூ.2.70 லட்சம் கோடி மோசடி நடந்துள்ளது. எதில் எடுத்தாலும் 50 சதவீத கமிஷன் பெற்ற அரசு இது. இவ்வாறு அவர் கூறினார்.
*பா.ஜ பதிலடி
மத்தியப் பிரதேச பாஜ தலைவர் விஷ்ணு தத் சர்மா இதுதொடர்பாக பதில் அளித்தார். அவர் கமல் நாத்தை “ஊழல் நாத்” என்று அழைத்தார. மேலும் 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் உள்பட பல பிரச்னைகளின் மாதிரிதான் கமல்நாத். அவர் 2023 மாதிரி அல்ல என்றார்.