நமது முன்னோர்கள் விவசாயத்தில் உழவு தொடங்கி, விளைபொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதுவரை மாடுகளையே நம்பி இருந்தனர். மாட்டின் கழிவுகள் பயிர்களுக்கு அடிஉரமாகவும், ஊட்டமேற்றிய தொழுவுரமாகவும் பயன்படுகிறது. இயற்கை விவசாயத்துக்குத் தேவையான பஞ்சகவ்யா, அமிர்த கரைசல் உள்ளிட்ட இடுபொருட்களை தயாரிப்பதற்கு மாட்டின் சாணம், கோமியம், பால், தயிர், நெய் உள்ளிட்ட பொருட்கள் தேவைப்படுகிறது. இதேபோல ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்கவும் கால்நடைகளின் கழிவுகள் பயன்படுகின்றன. இது பயிருக்கு தேவையான தழை, மணி, சாம்பல் சத்துக்களும், நுண்ணூட்ட சத்துக்களை வழங்குகிறது. இதன்மூலம் பயிரின் வளர்ச்சி ஓரே சீராக இருக்கும். பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறையும். சுற்றுப்புறச்சூழல் இயல்பாக இருக்கும். இயற்கை இடுபொருட்கள் மூலம் மகசூல் பலமடங்கு கூடும். மண்வளமும் கூடும். காய்கறிகள் விரைவில் கெடாது. பளபளப்புடனும், சுவை மிகுந்தும் காணப்படும்.
தேவையானவை
சாணம்: 200 கிலோ
கோமியம்: 50 லிட்டர்
புளித்த மோர்: 10 லிட்டர்
தண்ணீர்: 200 லிட்டர்.
செய்முறை
மாட்டுச்சாணம், கோமியம், புளித்த மோர், தண்ணீர் உள்ளிட்டவற்றை கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனைத்தொடர்ந்து 8 அடி அகலம், தேவைக்கேற்ற நீளம், அரை அடி உயரத்திற்கு மட்கக்கூடிய அனைத்து பொருட் களையும் பரப்பிவிட்டு, 20 லிட்டர் கலவையுடன் 200 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்கவும். பின் சாணத்தை 6 அங்குல உயரத்திற்கு பரப்பிவிட்டு, இலைதழை, குச்சிகளைப் போட்டு அதன் மேல் 20 சதவீத கரைசலை தெளிக்கவும். இதைப் போல் தொடர்ந்து 8 அடி உயரத்திற்கு அடுக்குகளை இட்டுப் பின்னர் சேறு கொண்டு நன்கு பூசி மெழுகிவிடவும். இதனை 100 நாட்கள் கழித்து எடுத்து உரமாகப் பயன்படுத்தலாம்.