திருவள்ளூர்: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய இன்னும் 4 நாட்களே உள்ளதால் நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம் என வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். வேளாண்மை இணை இயக்குனர் கா.முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பாணடில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் அக்ரிகல்ச்சர் இன்சூரனஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட் என்ற காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது.
தற்போது சம்பா நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.518 காப்பீட்டு கட்டணமாக விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ம் தேதி கடைசி நாளாகும். காப்பீடு செய்வதற்கான காலவரையறை முடிவடைய இன்னும் 4 நாட்களே உள்ளதால் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளுக்கு முன்னதாகவே காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
எனவே சம்பா பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளூம் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ அல்லது பொது சேவை மையங்களிலோ இ – சேவை மையங்கள் நேரிடையாக நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன் மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், கணினி சிட்டா,
வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீட்டு கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பொது சேவை மையங்களில் இ – சேவை மையங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம். பதிவு செய்த விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என விவசாயிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு தங்களது பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு கூறியுள்ளார்.