Friday, March 21, 2025
Home » 2025ம் ஆண்டுக்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு!

2025ம் ஆண்டுக்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு!

by Porselvi

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 18 கல்லூரிகள், 42 ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் 15 வேளாண் அறிவியல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு தட்பவெப்ப பகுதிகளுக்கேற்ப புதிய ரகங்கள் உருவாக்குவது குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சியின் பயனாக உருவாக்கப்படும் புதிய ரகங்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து வருடந்தோறும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வெளியிடப்படுவது வழக்கம்.அதன்படி சுமார் 100 வருடத்திற்கும் மேல் பழமை வாய்ந்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திலிருந்து இதுவரை பல்வேறு பயிர்களில் 929 ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இப்பல்கலைக் கழகத்திலிருந்து வெளியான பெரும்பாலான ரகங்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டில் வேளாண் பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் உள்ளடக்கிய சுமார் 19 புதிய ரகங்கள் தமிழ்நாடு அரசின் மாநில பயிர் ரகங்கள் வெளியீட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

வேளாண் பயிர்களில், நெல்லில் மூன்று ரகங்கள் (நடுத்தர குட்டை மற்றும் வறட்சியை தாங்கும் கோ 59. நடுத்தர சன்ன ரகங்கள் ஏடிடீ 56 மற்றும் ஏடிடீ 60) ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன. மக்காச்சோளத்தில் கோஎச்(எம்) 12, இைறவைக்கும் நெல் தரிசுக்கும் ஏற்ற உளுந்து வம்பன் 12, வறட்சியை தாங்கவல்ல நிலக்கடலை சிடிடீ 1 மற்றும் நடுத்தர உயரம் கொண்ட வீரிய ஒட்டு ஆமணக்கு ஒய்ஆர்சிஎச் 3 ஆகிய ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.தோட்டக்கலைப்பயிர்களில் நான்கு காய்கறிப் பயிர்கள் தக்காளி கோ 4, வீரிய ஒட்டு வெண்டை கோ (எச்) 5, மிளகாய் கோ 5 மற்றும் சாம்பல் பூசணி பிஎல்ஆர் 1 வெளியிடப்பட்டுள்ளன. பழப்பயிர்களில், திருச்சிராப்பள்ளி, தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள வாழை காவேரி வாமன் உட்பட வெண்ணெய்ப்பழம் டிகேடி 2 மற்றும் எலுமிச்சை எஸ்என்கேஎல் 1 வெளியிடப்பட்டுள்ளன. ஒரு மலர் பயிர் (அரளி தோவாளை 1), ஒரு தென்னை (ஏஎல்ஆர் 4), ஒரு நறுமணப்பயிர் (ஜாதிக்காய் பிபிஐ 1), ஒரு மூலிகைப்பயிர் சிறுகுறிஞ்சான் கோ 1 வெளியிடப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, சிப்பிக்காளானில் கேகேஎம் 1 என்ற ரகமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய ரகப் பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

13 − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi