சென்னை: தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள அரசாணையின்படி, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்று 60 வயதுக்குட்பட்ட கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, டயாலிசிஸ், புற்றுநோய், ஆஸ்துமா, சிலிக்கோரிஸ் மற்றும் பக்கவாதம் ஆகிய தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை பெற்று வரும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தீவிர நோய் பாதிப்பு நலத்திட்ட உதவித் தொகையை ஆண்டு ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் திட்டம் முதற்கட்டமாக மூன்று ஆண்டுகளுக்கு அறிமுகப் படுத்தப்படும். இந்நிதி உதவியானது 6 மாதங்களுக்கு ஒருமுறை விடுவிக்கப்படும். இதற்கென ஆண்டுக்கு ரூ.60 லட்சம் வீதம் மூன்றாண்டுகளுக்கு ரூ.1.50 கோடி தொடர் செலவினம் ஏற்படும். இத்திட்டத்தினால் சுமார் 1,500 பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.