Wednesday, October 4, 2023
Home » குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் மட்டுமே அமைச்சர் பதவியில் ஒருவர் நீடிக்க முடியாது: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு வாதம்

குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் மட்டுமே அமைச்சர் பதவியில் ஒருவர் நீடிக்க முடியாது: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு வாதம்

by Arun Kumar

சென்னை: குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர, ஒருவர் அமைச்சராக நீடிக்க எந்த தகுதி இழப்பும் இல்லை என செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்த்த வழக்கில், தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. செந்தில் பாலாஜி, எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அதேபோல, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவரும் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த அனைத்து வழக்குகளும் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், அரசியல் சட்ட பிரிவுகளையும், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி, அமைச்சரவையின் திருப்தி அடிப்படையில் மட்டுமே ஆளுநர் செயல்பட முடியும். குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர, ஒருவர் அமைச்சராக நீடிக்க எந்த தகுதி இழப்பும் இல்லை.

குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் அமைச்சராக நீடிக்க, அரசியல் சட்டமோ, சட்ட விதிகளோ தடை செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு வாதிட்டார். தேர்ந்தெடுத்த வாக்காளர்களால் நீக்க முடியாத மக்கள் பிரதிநிதியை, நீதிமன்ற வழக்கு மூலம் நீக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். எம்.எல்.ஏ.க்களை விட அமைச்சர்கள் குறைவாகவே ஊதியம் பெறுவதாகவும், எம்.எல்.ஏ.க்கள் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பெறுவதாகவும், அமைச்சர்கள் 76 ஆயிரம் ரூபாய் தான் பெறுகின்றனர் எனவும் அவர்களுக்கு பயண சலுகைகள் உள்ளன என்றார். இந்த கோ வாரண்டோ விசாரணைக்கு உகந்ததல்ல. ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு விரோதமாக செயல்பட முடியாது. அவர் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

அமைச்சரவை ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்றாலும், சில விதிவிலக்குகள் உள்ளதாகவும், அதுபோன்ற சூழல் நிலவுகிறதா இல்லையா என பார்க்க வேண்டும் என எம்.எல்.ரவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சக்திவேல் பதில் வாதம் முன்வைத்தார். குற்ற பின்னணி, சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறி செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை விரும்பவில்லை என முதல்வருக்கு கடிதம் எழுதியதாகவும், அதன்பின் உரிய காரணங்களை குறிப்பிட்டு செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது எனவும், இந்த விவகாரத்தில் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு வராமல் ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. அரசியல் சட்ட விதிகளின்படி ஆளுநர் செயல்பட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

ஜெயவர்த்தன் தரப்பில் பதில் வாதம் செய்த மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியால் அரசு பணியாற்ற முடியாது என்பதால் அவர் அமைச்சராக நீடிக்க முடியுமா என்ற கேள்வி முதல் முறையாக எழுந்துள்ளது. தன் கண்முன் நடக்கும் சட்டவிரோதங்களை கண்டு, சட்ட அதிகாரம் இல்லை என ஆளுநர் இருக்க முடியாது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை விரும்பவில்லை என ஆளுநர் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பார் என முதல்வர் அறிவித்தார். ஆளுநரின் நம்பிக்கையை பெறாத நபர் அமைச்சராக நீடிக்க முடியாது என வாதிட்டார். இதையடுத்து, எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்பினருக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்குகளின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?