Friday, December 8, 2023
Home » குற்றங்களைக் குறைத்து விட்டோம் என்பதாக அல்லாமல் குற்றம் நடைபெறாமல் தடுத்து விட்டோம் என்று காவல்துறையின் செயல்பாடு இருக்க வேண்டும்: காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

குற்றங்களைக் குறைத்து விட்டோம் என்பதாக அல்லாமல் குற்றம் நடைபெறாமல் தடுத்து விட்டோம் என்று காவல்துறையின் செயல்பாடு இருக்க வேண்டும்: காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

by Karthik Yash

சென்னை: அமைதியான மாநிலத்தில் தான் அனைத்து துறைகளும் வளரும், குற்றங்களைக் குறைத்து விட்டோம் என்பதாக அல்லாமல், குற்றம் நடைபெறாமல் தடுத்து விட்டோம் என்பதாக தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் பேசியதாவது: ஒரு அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமையும் சாதனையும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது தான், அமைதியான மாநிலத்தில் தான் அனைத்து துறைகளும் வளரும். நான் அடிக்கடி வலியுறுத்துவது, குற்றங்களைக் குறைத்து விட்டோம் என்பதாக அல்லாமல், குற்றம் நடைபெறாமல் தடுத்துவிட்டோம் என்பதாக தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்கள் பக்கமாக, எளியோர் பக்கமாகக் காவல் துறை இருக்க வேண்டும். இந்த அரசு நலிந்தோர், வறியோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் நாடக்கூடிய அரசாகும். ஒரு சாமானியர் தன்னுடைய விண்ணப்பம், புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் காவல் நிலையத்தை நாடுகின்றார் என்றால், அந்த நம்பிக்கையினைக் காப்பாற்றுவது தான் ஒரு நல்ல ஆட்சியின் அடையாளம். ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் புகார் கொடுக்க வரும் மனுதாரர்களைக் கனிவுடன் நடத்துவதற்கும், அவர்களுக்கு வழிகாட்டவும் வரவேற்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்பாளர்களை, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை மட்டுமே செய்யச் சொல்ல வேண்டும். இவர்களை மற்ற பணிகளுக்காகப் பயன்படுத்துவதாக எனக்குத் தெரிய வருகிறது. அது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

அனைத்து காவல்துறை ஆணையர், மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் ஒவ்வொரு புதன்கிழமையன்றும் குறை கேட்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆணையிட்டேன். அன்றைய தினம் நீங்கள் மனுதாரர்களிடம் இருந்து நேரடியாக மனுக்களைப் பெற வேண்டும். போக்சோ வழக்குகளில் தடய அறிவியல் துறையின் ஆய்வறிக்கை மிக முக்கிய ஆதாரம் என்பதால் அதனை விரைந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்துறைத் துணைத்தலைவர்கள் மாதத்திற்கு ஒருமுறையும், மண்டல காவல்துறைத் தலைவர்கள் 2மாதங்களுக்கு ஒரு முறையும் அனைத்து வழக்குகளின் நிலை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

பொது அமைதியை நிலைநாட்ட குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனைப் பெற்றுத் தந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட நடவடிக்கைகள் மீது ஒரு நம்பிக்கை ஏற்படும்.
ஆகையால், காவல்துறை ஆணையர், மாவட்டக் கண்காணிப்பாளர்கள் இதனை மாதந்தோறும் ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கையை அனுப்ப வேண்டும். கடந்த இரண்டரை ஆண்டுகளில் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. சாதிமத பூசல்கள் சிறிய அளவில் ஏற்படும் நிலையிலேயே கண்டறியப்பட்டு, முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். அடுத்து வரும் 7, 8 மாதங்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய காலம். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்தக் காலகட்டத்தில் காவலர் முதல் காவல் துறை உயரதிகாரிகள் வரை மிக எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும். சமூக ஊடகங்களின் நிகழ்வுகளையும் கண்காணித்து வரவேண்டும். அமைதி மற்றும் சட்டம், ஒழுங்கு நிலை நாட்ட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். விவாதிக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் அளவுகோல்களின் அடிப்படையில் நீங்கள் ஒவ்வொருவரும், தங்கள் பொறுப்பினை உணர்ந்து, உங்களுடைய மாவட்டத்திற்குச் சிறந்த தலைமையாகச் செயல்படுவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். தங்கள் மாவட்டம், மாநகரத்தைப் பாதுகாப்பானதாகவும், அமைதியானதாகவும் பாதுகாத்து நமது அரசிற்கு நற்பெயரை ஈட்டித் தாருங்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?