அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12ம் தேதி ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான 787-8 டீரிம்லைனர் விமானம் லண்டனுக்கு புறப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து மேலே சென்ற 30 நொடிகளிலேயே இந்த விமானம் அங்கிருந்த மருத்துவ கல்லூரி கட்டிடம் மீது விழுந்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் விமான பயணிகள், பணியாளர்கள் உள்பட 241 பேர் என மொத்தம் 270 பேர் உயிரிழந்து விட்டனர். நேற்று காலை வரை 215 பேரின் உடல்கள் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டு, அதில் 198உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் கேம்பல் வில்சன் கூறுகையில், “ஏர் இந்தியா போயிங் 787-8 டீரிம்லைனர் விமானம் நன்கு பராமரிக்கப்பட்டது. கடந்த 2023 ஜூன் மாதம் பெரியளவில் பரிசோதனை செய்யப்பட்டது. அடுத்ததாக நடப்பாண்டு டிசம்பரில் பரிசோதிக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன் வலப்பக்க இயந்திரம் கடந்த மார்ச் மாதம் மாற்றி அமைக்கப்பட்டது. இடப்பக்க இயந்திரம் ஏப்ரல் மாதம் நன்றாக சோதனை செய்யப்பட்டது. இயந்திரங்கள் இரண்டும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. விபத்துக்கு முன் அதில் எந்த பிரச்னைகளும் இல்லை. 33 போயிங் 787-8 விமானங்களில் 26 விமானங்களில் இப்போது ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது” என்றார்.