Friday, January 17, 2025
Home » கைவினை கலைஞர்களை தொழில் முனைவோர்களாக உயர்த்திட கலைஞர் கைவினை திட்டம்: 25 வகையான தொழில்களுக்கு கடன்; அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

கைவினை கலைஞர்களை தொழில் முனைவோர்களாக உயர்த்திட கலைஞர் கைவினை திட்டம்: 25 வகையான தொழில்களுக்கு கடன்; அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

by Karthik Yash

சென்னை: கைவினைக் கலைஞர்களை தொழில்முனைவோர்களாக உயர்த்திட “கலைஞர் கைவினைத் திட்டம்” திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், கைவினைஞர்களை தொழில் முனைவோர்களாக உயர்த்திடும் உன்னத நோக்கிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி “கலைஞர் கைவினைத்திட்டம்\\” என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு என விரிவான திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம், குடும்பத் தொழில் அடிப்படையில் அல்லாமல், 25 கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் புதிய தொழிலை தொடங்குவதற்கும், செய்யும் தொழிலை நவீன வடிவில் விரிவாக்கம் செய்திடவும் கடன் உதவிகளும், திறன்மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படும். கலைஞர் கைவினை திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.50,000 வரை 25 சதவீதம் மானியத்துடன் கூடிய ரூ.3 லட்சம் கடனுதவியும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்குவதோடு, தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின்கீழ் மரவேலைப்பாடுகள், படகு தயாரித்தல், உலோக வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், கண்ணாடி வேலைப்பாடுகள், மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், கட்டிட வேலைகள், கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்பான்கள் செய்தல் உள்ளிட்ட 25 வகையான தொழில்களுக்குக் கடன் வழங்கப்படும். ஆண்டுக்கு குறைந்தபட்சம் 10,000 கைவினைஞர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற www.msmeonline.tn.gov.in இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பங்களை மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர்கள் தலைமையில் உள்ள குழு சரிபார்த்து, வங்கிகளுக்கு பரிந்துரைக்கும். தமிழ்நாட்டில் உள்ள கைவினை கலைஞர்கள் திட்டத்தினை நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் வளம்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

1 + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi