டெல்லி : நீதிமன்ற உத்தரவுப்படி கைதியை ஜாமீனில் விடுதலை செய்யாத உத்தரப் பிரதேச அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், ரூ. 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் சிறையில் உள்ள குற்றவாளி ஒருவருக்கு கடந்த மாதம் விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், வழக்கின் துணை பிரிவை காரணம் காட்டி கைதியை சிறை அதிகாரிகள் விடுவிக்கவில்லை. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி விஸ்வநாதன் அமர்வு, உத்தரப்பிரதேச சிறைத்துறை டிஜிபி சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, சிறைத்துறை டிஜிபி காணொளி மூலம் ஆஜரானார். சிறை கண்காணிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார். அப்போது நீதிமன்ற உத்தரவுப்படி கைதியை விடுவிக்க மறுத்ததற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.அதற்கு கைதி நேற்று விடுவிக்கப்பட்டதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்தது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இது போன்று எத்தனை பேர் இன்னும் சிறையில் உள்ளனர் என கேள்வி எழுப்பினர். பின்னர், உத்தரப்பிரதேச சிறைத்துறை கண்காணிப்பாளருக்கு ரூ.5 லட்ச அபராதம் விதித்து, அதனை நாளைக்குள் பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்க உத்தரவிட்டனர்.