பணியிடங்களில் பெண்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் சொல் அல்லது செயல் கூட பாலியல் துன்புறுத்தல்தான்: ஐகோர்ட் விளக்கம்
சென்னை : பணியிடங்களில் பெண்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் சொல் அல்லது செயல் கூட பாலியல் துன்புறுத்தல்தான் என்று சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்கெட்டிங் பிரிவு அதிகாரிக்கு எதிராக அங்கு வேலை செய்யும் 3 பெண்கள் பாலியல் தொல்லை புகார் அளித்துள்ளனர். புகாரை விசாரித்த அந்நிறுவனத்தின் விசாகா குழு, அந்த அதிகாரிக்கு 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கக்கூடாது என பரிந்துரைத்தது. விசாகா குழுவின் பரிந்துரை ஒருதலைப்பட்சமானது என அந்த அதிகாரி சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரின் விளக்கத்தை கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விசாகா குழு பரிந்துரையை நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, தொழிலாளர் நல நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. புகாரளித்த பெண்களின் இருக்கைக்கு பின்னால் அந்த அதிகாரி நிற்பதாகவும், உடல் அளவைக் கேட்டதாகவும் நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், "உயரதிகாரி என்ற முறையில் இருக்கைக்கு பின்னால் நின்று கண்காணித்தேன். பாலியல் துன்புறுத்தல் செய்யும் நோக்கம் இல்லை," என அதிகாரி தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட பின், பணியிடத்தில் பெண்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் சொல் மற்றும் செயல்களும் பாலியல் துன்புறுத்தல்தான் என உத்தரவிட்ட நீதிபதி மஞ்சுளா, விசாகா குழு பரிந்துரைகள் செல்லும் என தீர்ப்பு அளித்து உத்தரவிட்டது.


