சென்னை : டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தயாரிப்பாளர் ஆகாஷ், தொழிலதிபர் ரவீந்திரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை விதித்து, சோதனை நடத்தக் கூடாது எனவும் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
இதையடுத்து, அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கு விசாரணையின் போது. சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருக்கிறதா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், சீலை அகற்றி, நோட்டீஸை எடுத்துவிடுகிறோம் என்று ED அதிகாரிகள் பதில் அளித்தனர். ஆனாலும் சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வி எழுப்ப, இறுதியாக அமலாக்கத்துறைக்கு சீல் வைக்கும் அதிகாரம் கிடையாது என்று ஒப்புக் கொண்டது.
மேற்கண்ட மனு மீது இன்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “டாஸ்மாக் வழக்கு தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இல்லை. நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரமும் இல்லை. இதனால் டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறையின் மேல் நடவடிக்கைக்கு தடை விதிக்கப்படுகிறது. கைப்பற்றிய பொருட்கள் மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை திரும்ப ஒப்படைக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தனர். அத்துடன் வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதுமட்டுமல்லாமல், ஐகோர்ட் ஆணையிட்டது.