பெங்களூரு: கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர் ஜனார்த்தனரெட்டி. ரூ.844 கோடி இரும்பு தாது ஏற்றுமதி முறைகேடு வழக்கில் கடந்த 2011ல் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். கடந்த 14 ஆண்டுகளாக ஐதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் நிறைவடைந்ததை தொடர்ந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று நீதிபதிகள் வழங்கினர்.
இதில் ஜனார்த்தனரெட்டி, ஒபலாபுரா மைனிங் கம்பெனி நிர்வாக செயலதிகாரி பி.வி.சீனிவாசரெட்டி, ஆந்திரா மாநில சுரங்கம் மற்றும் நில அறிவியல் துறை முன்னாள் இயக்குனர் வி.டி.ராஜகோபால், கர்நாடக மாநில முன்னாள் சுரங்கத்துறை இயக்குனர் கே.மேபாஜ் அலி ஆகியோரை குற்றவாளிகள் என்று உறுதி செய்ததுடன் அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
ஜனார்த்தனரெட்டி உள்பட 4 பேரை போலீசார் சிறையில் அடைத்தனர். 7 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் ஜனார்த்தனரெட்டியின் எம்எல்ஏ பதவி பறி போய் உள்ளது.