Sunday, May 18, 2025
Home செய்திகள்Showinpage திருத்தணியில் காணொலி காட்சி மூலம் ரூ.45 கோடியில் புதிய அரசு மருத்துவமனை கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்தார்

திருத்தணியில் காணொலி காட்சி மூலம் ரூ.45 கோடியில் புதிய அரசு மருத்துவமனை கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்தார்

by Ranjith

திருத்தணி: பொன்னேரியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், திருத்தணியில் ரூ.45 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவமனை கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். திருத்தணியில் இயங்கி வரும் வட்டார அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு உள்பட பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்காக நாடும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் பலர் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர். இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட சுற்றுவட்டார கிராமப் பகுதி மக்களுக்கு உயர்ந்த மருத்துவ சேவை கிடைக்கும் வகையில், திருத்தணியில் இயங்கி வரும் வட்டார மருத்துவமனை, கடந்த 2022ம் ஆண்டு மாவட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மேலும், இந்த தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட மருத்துவமனையில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் வகையில், முதலமைச்சரின் சிறப்பு திட்டத்தின்கீழ், பொதுப்பணி துறை சார்பில் ரூ.45 கோடியில் அதிநவீன மருத்துவ உபகரண வசதிகளுடன் புதிதாக 4 மாடிகள் கொண்ட மாவட்ட அரசு மருத்துவமனை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில், பொன்னேரி அருகே ஆண்டார்குப்பம் பகுதியில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், திருத்தணியில் ரூ.45 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அதிநவீன வசதிகளுடன் மாவட்ட அரசு மருத்துவமனை கட்டிடத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, திருத்தணியில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவமனை கட்டிடம் மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பொன்னேரியில் அரசு மருத்துவமனை கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்த நிலையில், கா ணொலி வாயிலாக திருத்தணியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனை கட்டிடத்தில் பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் முரளி, மருத்துவ அலுவலர், மருத்துவர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi