Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

சென்னையில் 8 பகுதிகளில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு சப்ளை: டிட்கோ நிறுவனத்துக்கு மாநகராட்சி அனுமதி

சென்னை: சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில், பட்டினம்பாக்கம் டிமாண்டி சாலைக்கு மறைந்த தமிழ் பாடகர் எம்.எஸ்.விஸ்வநாதன் பெயரை சூட்ட வேண்டும் உள்ளிட்ட சுமார் 110 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 27 இடங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த டிட்கோ நிறுவனத்தின் சார்பில் மாநகராட்சியிடம் அனுமதிக் கோரப்பட்டது. இந்த நிலையில் 8 இடங்களில் மட்டுமே குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதால் அந்த 8 இடங்களில் பணியை மேற்கொள்ள டிட்கோ அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட வடக்கு அவென்யூ 26வது தெரு, கண்ணாத்தாள் சாலை, ஆபிஸ் காலனி டி.வி.எஸ் அவென்யூ, அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட பிளாக் 40வது தெரு, ஸ்பர் டேங்க் சாலை, தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட டாக்டர் பெசன்ட் சாலை, கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட ஜெய் நகர், நடேசன் நகர் மேற்கு உள்ளிட்ட இடங்களில் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் உள்ள மயானங்கள் ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. எனினும் பல்வேறு இடங்கள் தூய்மை இல்லாமல் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து சென்னை மாநாகராட்சி பகுதியில் உள்ள முதல் 5 மண்டலங்களில் உள்ள 67 மயானங்களும் 11வது மண்டலம் முதல் 15வது மண்டலம் வரை உள்ள 88 மயானங்கள் என மொத்தம் 155 மயானங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி மயானங்களில் சேரும் மற்றும் கொட்டப்படும் கழிவுகள் தினந்தோறும் அகற்றப்படும். இறுதி சடங்குகளில் பயன்படுத்தப்படும் பூமாலை, பாடை, பானை போன்ற கழிவுகள் தினந்தோறும் அகற்றப்படும். தூய்மை பணிகளை மேற்பார்வையிட தனி பொறியாளர் நியமிகப்பட்டு பணிகள் கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 7 இடங்களில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் விதமாக கடற்பாசி பூங்கா அமைக்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது நிதியமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது முதல்கட்டமாக சென்னையில் 2 இடங்களில் காலநிலை எதிர்ப்பு கடற்பாசி பூங்கா அமைக்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. அதன்படி, பாடி இளங்கோ நகரில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்திலும், துரைப்பாக்கம் பகுதியில் உள்ள மாநகராட்சி மைதானத்திலும் இந்த ஸ்பான்ச் பூங்கா அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 7 இடங்களில் சிஎம்டிஏ மூலமாக கடற்பாசி பூங்கா அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 2 இடங்களில் புங்கா அமைப்பதற்கான பணிகளை தொடங்க மாநகராட்சி முன் அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஸ்பான்ச் பூங்காக்கள் பொழுதுபோக்கு அம்சங்களாக மட்டும் அல்லாமல், சென்னையின் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு அதிக மரங்களோடும், மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரை சேகரித்து வைக்கும் விதமாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. கூட்டத்தில், கேள்வி நேரத்தின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து ஆ.ராசா எம்பி அவமரியாதையாக பேசியதற்கு பாஜ உறுப்பினர் உமா ஆனந்த் கண்டனம் தெரிவித்தார். அவருக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கேள்வி விவாதத்தின் போது, இது போன்று விவகாரங்களை எழுப்பக்கூடாது என்று துணை மேயர் அறிவுறுத்தினார்.