பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆட்சியில் நடந்த கொரோனா நிதி முறைகேடு வழக்கு சிஐடிக்கு மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா மாநில பாஜ மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா ஆட்சி காலத்தில், கொரோனா தொற்றை எதிர்கொள்ள ரூ.13,000 கோடி அளவுக்கு செலவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் ரூ.1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதுகுறித்து ஆய்வு செய்ய நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. சமீபத்தில் இந்த குழுவின் அறிக்கை வெளியானது.
அதனால் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு, பாஜ எம்பி சுதாகர் ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கர்நாடகா அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா நிதி முறைகேடு தொடர்பான வழக்கை சிஐடி விசாரணைக்கு மாற்றியுள்ளோம். சிஐடி காவல் கண்காணிப்பாளர் ராகவேந்திர ஹெக்டே தலைமையிலான குழு, கொரோனா நிதி முறைகேடு தொடர்பான விசாரணையை நடத்தும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வந்த நிலையில், இவ்வழக்கு சிஐடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.