ஆவடி: குடிபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடி காவலர் குடியிருப்பில் வசித்தவர் ஜார்ஜ் (29). இவர் காவல் உயர் அதிகாரியிடம் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரணா (29) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தன்வி (4) என்ற மகள் உள்ளார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு ஜார்ஜ் மதுபோதையில் இருந்துள்ளார். அப்போது, வெளியே செல்ல வேண்டும் என மனைவியிடம் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், மன உளைச்சலில் இருந்த ஜார்ஜ் படுக்கை அறையில் தூக்கு போடப்போவதாக கூறிவிட்டு படுக்கைக்குச் சென்றுள்ளார். தன் கணவர் எப்போதும், இதேபோல் தான் கூறி விட்டுச் செல்வார். எனவே அவர் எதுவும் செய்துகொள்ள மாட்டார் என்று பிரணா இருந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, சிறிது நேரம் எந்த சத்தமும் இல்லாததால் சந்தேகமடைந்த அவர், உடனே படுக்கை அறைக்குச் சென்று பார்த்தபோது, தன் கணவர் தூக்கில் தொங்கியதால் அதிர்ச்சி அடைந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஜார்ஜை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே ஜார்ஜ் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து, திருமுல்லைவாயல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஜார்ஜின் மனைவி பிரணாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.