Thursday, May 22, 2025
Home செய்திகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரயிலில் பர்னஸ் ஆயிலுக்கு மாற்றாக டீசல் என்ஜின் மாற்றி சோதனை ஓட்டம்

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரயிலில் பர்னஸ் ஆயிலுக்கு மாற்றாக டீசல் என்ஜின் மாற்றி சோதனை ஓட்டம்

by Lakshmipathi

*இனி சுற்றுச்சூழல் மாசு இருக்காது

குன்னூர் : குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதை இடையே பர்னஸ் ஆயில் மூலம் இயங்கும் எக்ஸ் கிளாஸ் என்ஜின் டீசல் என்ஜினாக மாற்றப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதனை தீபாவளிக்கு முன்பு சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் இனி வரும் காலங்களில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதவாறு மலைரயில் இயங்கும்.

நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக நீலகிரி மலை ரயில் சேவை இயங்கி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினம் தோறும் மலைரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை பர்னஸ் ஆயில் மூலம் மலை ரயில் இயக்கப்பட்டு வருவதோடு, குன்னூர் – ஊட்டி இடையே டீசல் என்ஜின் மூலம் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

பர்னஸ் ஆயிலால் மலை ரயிலை இயக்குவதால் அதிகளவில் மாசு ஏற்படுவதாக கூறி, அதனை மாற்றுவதற்கு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக டீசல் என்ஜினை மாற்றிமைக்கும் முயற்சியில் தென்னக ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டனர். இதன்படி பர்னஸ் ஆயில் என்ஜின், டீசல் என்ஜினாக மாற்றப்பட்டு மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே இயக்கப்பட்ட 37399 என்ற எண் கொண்ட எக்ஸ் கிளாஸ் என்ஜின் பர்னஸ் ஆயில் பணிமனையில் பழுது நீக்கப்பட்டு, குன்னூர் ரயில்வே பணிமனையில் டீசல் நீராவி என்ஜினாக மாற்றி வடிவமைக்கப்பட்டது. இதையடுத்து மாற்றி வடிவமைக்கப்பட்ட டீசல் என்ஜின் மூன்று இரயில் பெட்டிகளுடன் இணைக்கப்பட்டு குன்னூர் – ரன்னிமேடு இடையே நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இந்த சோதனை வெற்றி பெற்ற நிலையில் குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட பின்பு தீபாவளிக்கு முன்பு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குன்னூர் பணிமனை மூத்த தொழில்நுட்ப வல்லுநர் மாணிக்கம் முயற்சியில் பர்னஸ் ஆயில் என்ஜினை தற்போது டீசல் என்ஜினாக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டம்‌ வெற்றி அடைந்துள்ளது.

ஏற்கனவே இவர் பர்னஸ் ஆயில் என்ஜினை டீசல் என்ஜினாக மாற்றி அமைத்துள்ளார். மேலும் இந்த எஞ்சின் மூலம் இயக்கப்படும் மலை ரயில், இனி வரும் காலங்களில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதவாறு இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi