Wednesday, June 25, 2025
Home செய்திகள் 3 காற்று சுழற்சிகள் இணைவு தமிழகத்தில் பல இடங்களில் கடும் மழை நீடிக்கும்

3 காற்று சுழற்சிகள் இணைவு தமிழகத்தில் பல இடங்களில் கடும் மழை நீடிக்கும்

by Francis

சென்னை: மகாராஷ்ட்ரா, கர்நாடகா, ஒடிசா பகுதிகளில் நிலை கொண்டுள்ள 3 காற்று சுழற்சிகள் ஒன்றிணைவதால் தமிழகத்தில் 30ம் தேதி வரை அனேக இடங்களில் கடும் மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதில் அந்தமான் கடல் பகுதியில் இன்று உருவாகும் புதிய காற்று சுழற்சியும் இணைவதால் தமிழகத்தில் அனேக இடங்களில் கடும் மழைப்பொழிவு நீடிக்கும். இதன் காரணமாக முக்கிய அணைகள் நிரம்பும் வாய்ப்பும் உள்ளது.
தற்போதைய வானிலை அமைப்பின்படி, தமிழகத்தில் நேற்று நீலகிரி மாவட்டத்தில் 390 மிமீ மழை பெய்துள்ளது. அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெள்ளாச்சி வழியாக காற்று உள் நுழைந்ததால் அங்கும் மழை அதிகமாக இருந்தது. பாலக்காட்டு கணவாய்க்கு நேராக உள்ள பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்துள்ளது. நேற்று காலை 4 மணி நிலவரப்படி பில்லூர் அணையில் இருந்து 16 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், பவானி சாகருக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துள்ளது. அதேபோல மேட்டூர் அணையும் நிரம்பியுள்ளது. கபினி அணை நிரம்பும் வாய்ப்பும் உள்ளது. 31ம் தேதிக்கு பிறகு தென்மேற்கு பருவமழை சற்று குறைய வாய்ப்பு இருந்தாலும், அதற்குள் தென்மேற்கு பருவமழை எவ்வளவு பெய்ய முடியுமோ அவ்வளவும் பெய்துவிடும் வாய்ப்புள்ளது.

மகாராஷ்டரா கரையோரம் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் கரை கடந்த நிலையில் தற்போது வலுவிழந்த நிலையில் தெலுங்கானா பகுதி நோக்கி நகர்ந்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்று சுழற்சியும் ஒடிசா கரைப்பகுதியில் நெருங்கியுள்ளது. இதுவரை உயர் அழுத்தத்தின் பிடியில் இருந்த பாக்கிஸ்தான் எல்லையில் ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளது. குறிப்பாக கர்நாடகா, மகாராஷ்ட்ரா, தெலுங்கான பகுதிகளில் உருவாகியுள்ள 3 காற்று சுழற்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இதன் காரணமாக வட மாநிலங்களில் சில இடங்்களில் மேக வெடிப்பும் ஏற்பட்டு பலத்த மழை பெய்துபெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 107 ஆண்டுகளில் பெய்யாத அளவுக்கு மகாராஷ்ட்ராவில் கடந்த இரண்டு நாட்களில் மழை பெய்துள்ளது. காற்றுக்குவிதல் மற்றும் காற்று சுழற்சிகள் இணைதல் ஆகியவை எல்லாம் அரபிக் கடல் வழியாக குவிந்து வங்கக் கடல் நோக்கி நகர்கின்றன. வட இந்தியாவின் நிலப்பகுதியை நோக்கி 31ம் தேதி வரை நகர்வதால் இடைப்பட்ட பகுதிகளில் 31ம் தேதி வரை மழை பெய்யும். இந்த மழை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், கர்நாடகா, கோவா, மகாராஷ்ட்ரா பகுதிகளில் 31ம் தேதி வரை பெய்யும். 29ம் தேதி வை தீவிர மழை பெய்யும்.

விடிய விடிய மழை பெய்யும். காலையில் குறைந்து, மெல்லிய சாரல் மழையாக பெய்து இரவில் கொட்டித் தீர்க்கும்.
காற்று குவிதல் என்பது ஒரே இடத்தில் நிகழாமல் கன்னியாகுமரி வரையில் பரவலாக நடக்கும் என்பதால் எல்லா இடங்களிலும் மழை பெய்யும். இந்த மழை மாமல்லபுரம் வரையில் நீண்டு நேற்று இரவில் பெய்துள்ளது. திருநெல்வேலியில் தென்காசியில் மழை பெய்யும். தூத்துக்குடியில் சாரல் மழை பெய்யும். சிவகாசி வரைக்கும் சாரல் மழை இருக்கும். சிவகங்கை மாவட்டம், கொடைக்கானல் பகுதிகள், மாலையில் கடும் மழை பெய்யும். இது வால்பாறை நீடிக்கும். டெல்டாவிலும் தூறல் மழை இருக்கும். திருச்சி, திண்டுக்கல் பொள்ளாச்சி, ஈரோடு, மாவட்டங்களில் தூறல் மழை இருக்கும். வங்கக் கடலோரம் வரை நீடிக்கும். மாலையில் வட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் வ ாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அனேக இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்துள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதிகமழையும் பெய்துள்ளது. வெப்பநிலையை பொருத்தவரையில் சென்னை, நீலகிரி, கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், திருச்சி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை குறைந்துள்ளது. கடலூர், தர்மபுரி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, சேலம், திருப்பத்தூர், கோவை மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரையும், ஈரோடு, திருவள்ளூர், நீலகிரி வேலூர் மாவட்டங்களில் இயல்லைவிட 5 டிகிரி செல்சியசுக்கும் கீழேயும் வெப்பநிலை குறைந்துள்ளது.

இந்நிலையில், தென் மேற்கு பருவமழை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்தம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வின் காரணமாக தமிழகத்தில் நேற்று அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமுதல் அதிகனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகன கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் நேற்று பெய்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும் வாய்ப்புள்ளதால் அங்கு இன்றும் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இதை நிலை 31ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. மேலும் தமிழக கடலோரத்திலும், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் 30ம் தேதி வரை வீசும். வங்கக் கடல் பகுதியில் 30ம் தேதி வரையில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு தென் கிழக்கு வங்கக் கடலின் ஒருசில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi