பூந்தமல்லி: திருவேற்திருவேற்காடு அடுத்த காடுவெட்டி, காயத்ரி நகர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவர் திருவள்ளூரில் நெடுஞ்சாலை துறை தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார். இவர் குடியிருக்கும் பகுதியில் திருவேற்காடு நகராட்சி சார்பில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு தாசில்தார் செல்வம் காரில் வந்தபோது அவரது வீட்டின் முன் பகுதியில் கார் ஏற்றுவதற்காக அமைக்கப்பட்ட சரிவான படிக்கட்டுகள் இடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மழை நீர் கால்வாய் அமைக்கும் பணிகளுக்காக இடிக்கப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து திருவேற்காடு நகராட்சி ஆணையர் ஜகாங்கீர் பாஷாவிடம் தொலைபேசியில் தாசில்தார் செல்வம் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது எந்தவித முன்னறிவிப்புமின்றி இடித்துவிட்டதாகவும் அதற்கு நேரில் வந்து பேசுமாறு கூறியபோது, நகராட்சி ஆணையர் தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி அலுவலகத்திற்கு நேற்று நேரில் சென்று தாசில்தார் செல்வம் கேட்டபோது நகராட்சி ஆணையர் ஜகாங்கீர் பாஷாவிற்கும், தாசில்தார் செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவரை ஒருவர் மாறி, மாறி கடுமையாக பேசிக்கொண்டனர்.
இந்நிலையில் நகராட்சி ஆணையர் ஜகாங்கீர் பாஷா திருவேற்காடு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அரசு பணியை செய்ய விடாமல் தடுப்பதாக தாசில்தார் செல்வம் மீது புகார் அளித்தார். இதை அறிந்த தாசில்தார் செல்வம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தனது வீட்டின் முன் பகுதியை நகராட்சி அதிகாரிகள் தோண்டிவிட்டதாகவும் மேலும் அவதூறாக பேசியதாகவும் நகராட்சி ஆணையர் மீது தாசில்தார் செல்வமும் திருவேற்காடு போலீசில் புகார் அளித்தார். இருவரும் மாறி, மாறி அளித்த புகார்களின் பேரில் திருவேற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.