பெங்களூரு மாநகரம் போக்குவரத்து நெருக்கடிக்கு பிரசித்தி பெற்ற நகரமாக உள்ளது. உலகின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் பெங்களூருவில் இயங்குவதால் பலாப்பழத்தில் ஈ மொய்ப்பது போல் அம்மாநகரை மக்கள் மொய்க்கின்றனர். கார், இருசக்கர வாகனம், ஆட்டோ, ஜீப், பொதுபோக்குவரத்து, கால்டாக்ஸி என்று ஏகப்பட்ட போக்குவரத்து சாதனங்கள் சாலையில் மும்முரமாக இயங்கிவருகிறது. அப்படி இருந்தும் போக்குவரத்தை கட்டுப்படுத்த மட்டும் மாநில அரசால் முடியவில்லை.
சாலை போக்குவரத்து நெருக்கடியை குறைக்க மெட்ரோ ரயில் சேவை பெங்களூருவின் அனைத்து இடங்களிலும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் சேவை அறிமுகமானது முதல் ஐடி ஊழியர்கள், நீண்ட தூரம் பயணிப்பவர்கள் சீசன் டிக்கெட், ரீசார்ஜ் கார்டு ஆகியவற்றை பெற்று மெட்ரோவில் சவுகரியமாக பயணித்து வந்தனர். இந்நிலையில், இதற்கும் ஒன்றிய அரசு ஆப்பு வைத்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று கூறி திடீரென 50 சதவீதம் கட்டணத்தை உயர்த்திவிட்டது.
இதனால் 30 கி.மீ. மேல் பயணத்துக்கு ரூ.60 முதல் ரூ.90 ஆக கட்டணம் உயர்ந்துவிட்டது. இந்த கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வளவு கட்டணம் செலுத்தி செல்வதற்கு பதில் அலுவலகத்துக்கு பைக்கில் செல்வதே சிறந்தது என்று மீண்டு்ம் சொந்த வாகனங்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால் பழையபடி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் மெட்ரோ பயன்பாட்டை புறக்கணிக்கும்படி சமூகவலைதளங்களில் மக்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.
இப்படி மக்கள் தவித்து கொண்டிருக்கும் நேரத்தில் மெட்ரோ கட்டண உயர்வுக்கு ஆளும் காங்கிரஸ் அரசு காரணம் என்று பாஜ கொளுத்திபோட்டது. இதனால் கொதிப்படைந்த முதல்வர் சித்தராமையா, ‘எதற்கெடுத்தாலும் பாஜ அரசியல் செய்து மக்களை குழப்புகின்ற பணியில் ஈடுபடுகின்றனர். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து மெட்ரொ கட்டணம் உயர்த்துவது குறித்து ஆய்வு செய்தது ஒன்றிய அரசு தான்.
மெட்ரோ சேவையில் மாநில அரசின் பங்கு 50 சதவீதம் இருந்தாலும், ஆட்களை சேர்ப்பது, கட்டணத்தை உயர்த்துவது ஆகிய பொறுப்புகளை ஒன்றிய அரசு தன்வசம் வைத்துள்ளது. இது பாஜ தலைவர்களுக்கும் தெரியும். ஒன்றிய அரசிடமோ, பாஜ எம்பிக்களிடமோ இது குறித்து எதிர்ப்பு தெரிவிக்க திராணி இல்லாமல் காங்கிரஸ் மீது குற்றம்சாட்டுவது எப்படி நியாயமாகும் என்று சாடியுள்ளார். கட்டண உயர்வுக்கு பிறகு பீக் நேரங்களில் மெட்ரோவில் கூட்டம் குறைந்துவிட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் பஸ், இருசக்கர வாகனத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
பெங்களூரு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட மெட்ரோ ரயில் சேவை தற்போது பயனற்றதாகிவிட்டது என்று மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், மெட்ரோ கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்து திரும்பபெற வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் சித்தராமையா மெட்ரோ நிர்வாக இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார். பெங்களூரு மக்கள் பாஜவுக்கு வாக்களித்து மக்களவைக்கு அனுப்பிவைத்தனர். அதற்காக சிறந்த பரிசை ஒன்றிய பாஜ அரசு மக்களுக்கு வழங்கியுள்ளது என்று காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இப்படி மெட்ரோ கட்டண உயர்வு பெங்களூருவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.