Saturday, December 9, 2023
Home » தொடர் மழை எதிரொலி சரணாலயங்களுக்கு வரத்துவங்கிய பறவைகள்

தொடர் மழை எதிரொலி சரணாலயங்களுக்கு வரத்துவங்கிய பறவைகள்

by Lakshmipathi

ராமநாதபுரம் : தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பறவைகள் சரணாலயங்களுக்கு வெளிநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பறவைகள் வர தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில், கடலாடி அருகே மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர், முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி, கீழகாஞ்சிரங்குளம், கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி, ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை பெரிய கண்மாய் மற்றும் தேர்த்தங்கல் உள்ளிட்ட இடங்களில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

இங்கு ஆண்டு தோறும் பருவ மழைக்காலம் துவங்கும் மாதமான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இனப்பெருக்கத்திற்காக பறவைகள் வருவது வழக்கம். குறிப்பாக தாழைக் கொத்தி, செங்கல் நாரை, நத்தை கொத்தி, கிங்பிஷர், கரண்டிவாய் மூக்கான், வில்லோ வால்பவர், ஆஸ்திரேலியா பிளம்மிங்கோ, நாரை, கொக்கு வகைகள், கூழைகிடா உள்ளிட்ட 50 வகைக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வரும்.

இதுபோன்று மண்டபம் அருகே உள்ள மனோலி தீவு, தொண்டி காரங்காடு அலையாத்தி காடு, வாலிநோக்கம் கடல் தரவை மற்றும் கடல்தீவு பகுதிகளில் நண்டு திண்ணி உல்லான், முடிச்சு உல்லான், கல்திருப்பி போன்ற அரியவகை பறவை இனங்கள் வருவது வழக்கம். இங்குள்ள தட்பவெப்ப சூழ்நிலையில் இனப்பெருக்கம் செய்வதற்கும், தேவையான இரைகள், கடல், கடல் உயிரினங்கள் இருப்பதால் பல மைல் தூரம் கடல் கடந்து பறந்து வந்து இங்குள்ள கண்மாயிலுள்ள நாட்டு கருவேல மரங்கள் மற்றும் தீவு பகுதிகளில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை தங்கி, முட்டையிட்டு குஞ்சு பொறித்து, குஞ்சுகளுடன் பறந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் தற்போது காலம் கடந்து பருவமழை துவங்கி, தொடர்ந்து மழை பெய்து வருவதால் சரணாலய கண்மாய் உள்வாய் கிடங்குகளில் தண்ணீர் தேங்கி, பசுமையான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் வெளிநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 10க்கும் மேற்பட்ட வகையை சேர்ந்த பறவைகள் வர தொடங்கியுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, மாவட்டத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்திற்கு தற்போது வாழ்விடங்கள்(உள்ளூர்) மற்றும் புலம்பெயர் நீர்ப்பறவைகள் வர தொடங்கியுள்ளது. இதில் சொந்த வாழ்விட பறவைகளான உள்ளூர் இன பறவைகள் மற்றும் சைபீரிய மற்றும் மங்கோலியாவை சேர்ந்த வெள்ளைதலை வாத்து, மத்திய தரைக்கடல் பகுதி நாரைகள், ஆர்க்டிக் பகுதி பறவைகள், கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியாவை சேர்ந்த பறவை இனங்கள் மட்டுமே வந்துள்ளது.

தொடர் மழை பெய்து கண்மாய்களில் நீர் பெருகியவுடன் வழக்கம்போல் அனைத்து வகை பறவைகள் வரத்து அதிகரிக்கும். ஜனவரியில் பறவை எண்ணிக்கை குறித்து மாணவர்களை கொண்டு கணக்கெடுக்கப்படும். இங்குள்ள தட்பவெப்ப நிலைக்கேற்ப முட்டையிட்டு, அடைகாத்து குஞ்சு பொறித்து வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பறந்து செல்லும் என்றனர்.
சித்திரங்குடி, காஞ்சிரங்குளம், மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர், காஞ்சிரங்குடி, தேர்த்தங்கல் ஆகிய பறவைகள் சரணாலயம் உள்ள கண்மாய்களில் வைகை தண்ணீரை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பறவை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டாசு வெடிக்காத மக்கள்

பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள கிராமமக்கள் கூறும்போது, பறவைகள் எங்கள் விருந்தாளிகள், அவை ரம்மியமான, ரீங்காரத்துடன் வருவது மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. இதனால் தீபாவளிக்கு கூட சப்தம் தரக்கூடிய பட்டாசுகளை வெடிப்பது கிடையாது என்றனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?