மதுரை: அதிமுக ஆட்சியில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் சின்னத்தாய். கரிவலம்வந்தநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொகுப்பூதிய அடிப்படையில் தூய்மைப் பணியாளராக கடந்த 2.8.1988ல் நியமனம் ஆனார். மாதம் ரூ.70 சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் பகுதி நேரமாக பணியாற்றினார். தனது பணியை வரன்முறை செய்யக் கோரிய வழக்கில், சின்னத்தாய் பணியை வரன்முறை செய்து, அவருக்குரிய காலமுறை ஊதியம் மற்றும் அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவு அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. இதனிடையே சின்னத்தாய் இறந்தார்.இதனால், அவரது மகன் பரமன் தரப்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, பள்ளி கல்வித்துறை செயலர் காகர்லா உஷா, பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா ஆகியோர் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா ஆஜரானார். பள்ளி கல்வித்துறை செயலர் காகர்லா உஷா, கமிஷனர் நந்தகுமார் ஆகியோர் ஆஜராக விலக்களிக்க கோரி அரசுத் தரப்பில் மனு செய்யப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, இருவருக்கும் ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பிக்கப்படுகிறது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் இருவரையும் பாதுகாப்புடன் அழைத்து வந்து ஆஜர்படுத்த வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை செப். 11க்கு தள்ளி வைத்தார்