வீரவநல்லூர்: தென்காசி மாவட்டம் செங்கோட்டை-ஈரோடு பாசஞ்சர் ரயில் நேற்று காலை 5 மணியளவில் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டது. இந்த ரயிலில் 500 பயணிகள் பயணித்தனர். நேற்று காலை 6 மணியளவில் சேரன்மகாதேவியை அடுத்த கூனியூர் அருகே ரயில் வரும்போது தண்டவாளத்தில் பெரிய அளவிலான சிமெண்ட் கல் வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதனை ரயில்வே இன்ஜின் டிரைவர் கவனிக்கவில்லை. இதனால் ரயில் வந்த வேகத்தில் சிமெண்ட் கல் மீது ஏறி இறங்கியது. இதையடுத்து ரயிலை உடனடியாக ரயில் இன்ஜின் டிரைவர் நிறுத்தினார்.
இதுகுறித்து உடனடியாக அவர் தென்காசி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் கூனியூர், பழைய சாலைத் தெருவை சேர்ந்த கோபால் மகன் முருகன் (40) என்பவர் தண்டவாளத்தில் கல் வைத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குபதிந்த ரயில்வே எஸ்ஐ கற்பகவிநாயகம், முருகனை அதிரடியாக கைது செய்தனர்.