சென்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் நடந்த ஒரு அரசியல் விவாதத்தில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வன்னியரசு, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருப்பதாக கூறியிருக்கிறார். அவரது பேச்சு அவரது அரசியல் அறியாமையை காட்டுகிறது. இந்திய தேசிய காங்கிரஸ் என்பது ஒரு சாதாரண கட்சி அல்ல. சுதந்திர போராட்டத்தையும், இந்திய அரசியலமைப்பையும் நாட்டின் பல முக்கியமான சமூக நலத்திட்டங்களையும் உருவாக்கிய வரலாற்றுப்பூர்வமான மிக பெரிய இயக்கம்.
இத்தகைய கட்சியை விமர்சிக்க, வன்னியரசுக்கு என்ன தகுதி இருக்கிறது?. காங்கிரசின் வரலாற்றையும், அதன் தாக்கத்தையும் அறியாமலேயே பொது நிகழ்வுகளில் இவ்வாறான விமர்சனங்களை செய்யும் இவர், தரமற்ற அரசியலை கடைபிடிக்கிறார் என்பது நிரூபணமாகிறது. காங்கிரசின் வரலாற்றையும், தமிழக இளைஞர்களிடையே அது விதைத்துள்ள நம்பிக்கையையும் மதிக்காத வகையில் பேசுவது எந்தவிதமான அரசியல் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.